சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியின் தலைமையில் விளையாடிய இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது. இதுவரை மொத்தம் ஏழு போட்டிகளில் இரண்டாவது வெற்றியைப் பெற்று இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்த நிலையில் தோனி பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். தோனி தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் எனவும், அவரது கேப்டன்சி துல்லியமாக இருந்ததாகவும் கூறினார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

இந்த போட்டிக்கு பிறகு மைக்கேல் கிளார்க் பேசுகையில், "தோனி எப்போது ஒரு நகரத்தில் இருந்தாலும் அங்கு மிகவும் சத்தமாக இருக்கும். அவரது விக்கெட் கீப்பிங் எனக்கு எந்த விதமான ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்பும் இதை சொல்லி இருக்கிறேன். இப்போதும் அவர் உலகின் மிகச்சிறந்த கீப்பர்."
"தோனி மிக நீண்ட காலமாக ஒரே மாதிரியாக விக்கெட் கீப்பிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அது மிகவும் அற்புதமானது. இன்று அவரது கேப்டன்சியும் துல்லியமாக இருந்தது. மிடில் ஓவர்களில் இரண்டு ஸ்பின்னர்களையும் பயன்படுத்திய விதம், ஓவர்களை வேகமாக வீசி முடித்தது அதன் மூலம் எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தது என அவரது கேப்டன்சி சரியாக இருந்தது."
"இன்று நடந்த சிறந்த விஷயம் தோனியின் கேப்டன்சி தான். அவர் சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டார். அதற்கு ஏற்ப மாற்றங்களை செய்தார். அவரது சுழற் பந்துவீச்சாளர்களை வரிசையாக வீச வைத்தார். இதைத்தான் தோனி தனது கிரிக்கெட் வாழ்வு முழுவதும் செய்து இருக்கிறார்."
"சுழற் பந்துவீச்சாளர்களை தோனி அழைத்தவுடன் அவர்கள் வேகமாக பந்து வீசினார்கள். அவர்கள் போட்டியின் வேகத்தை மாற்றினார்கள். பிட்சை தங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டார்கள். விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். ஒரு கேப்டனாக இன்று இரவு களத்தில் தோனி செயல்பட்ட விதம்தான் இந்த போட்டியை நமக்கு சிறப்பாக விவரிக்கும்" என்று பாராட்டி பேசினார் மைக்கேல் கிளார்க்.