கவுஹாத்தி: ரவிச்சந்திரன் அஸ்வின் பவுலிங் அணுகுமுறை நவீன டி20 கிரிக்கெட்டுக்கு பொருந்தவில்லை என சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் வாகன். இளம் வீரர்கள் அவரை ஒரு பெரிய பவுலராக கருதாமல், அவரை எப்படி தாக்குவது என நினைப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் அவர் ஒரு ஓவருக்கு 9.9 ரன்கள் என்ற சராசரியில் ரன்களை விட்டுக் கொடுத்து இருப்பதோடு மொத்தம் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.

அதிலும் இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த முறை அஸ்வின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே ஓரளவு சிறப்பாக செயல்பட்டார் என்று சொல்லலாம். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் போது ஃபில் சால்ட் அவரை குறி வைத்து அடித்தார். அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியின் போது நிதீஷ் ராணா அஸ்வினின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.
இதை அடுத்து இப்போது உள்ள வீரர்களுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மீது மரியாதை இல்லை என சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார் முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகன். இது பற்றி வாகன் பேசுகையில், "ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது புதிய சகாப்தத்தில் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மற்ற அணிகள் அவர் மீது மரியாதையை வெளிப்படுத்துவார்கள். அணி கூட்டத்தில் அஸ்வினுக்கு எதிராக நாம் 24 அல்லது 28 ரன்கள் வரை எடுக்கலாம், அவருக்கு அதிக விக்கெட்டுகளை விட்டு கொடுக்காமல் ஆட வேண்டும் என்று பேசினார்கள்."
"ஆனால், இப்போது இருக்கும் வீரர்கள் அப்படி எல்லாம் நினைப்பதில்லை. அஸ்வினை எப்படி அடித்து ஆடலாம்?, அவரது பந்துவீச்சை மேலும் எப்படி சேதப்படுத்துவது? என்று சிந்திக்கிறார்கள். அஸ்வினின் பந்துவீச்சை அவர்கள் பலமுறை பார்த்து விட்டார்கள். எனவே, அவர் பந்து வீச வரும்போது அதை அடித்து ஆடுவதற்கும் முடிவு செய்து விடுகிறார்கள்."
"மனதளவில் இங்கு மிகப்பெரிய அணுகுமுறை மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக நினைக்கிறேன். அஸ்வின் யாராக இருந்தால் என்ன, பெயர் என்பது முக்கியமே இல்லை, பந்து எப்படி வருகிறது என்பதுதான் முக்கியம் என இப்போது உள்ள வீரர்கள் நினைக்கிறார்கள்" என்று கூறி இருக்கிறார் மைக்கேல் வாகன்.
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் நான்கு ஓவர்களில் 46 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தி இருந்தார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே நிதீஷ் ராணா அதிரடியாக விளையாடியதால், 19 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார்.
2024 ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். அவரது பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் 51.89 என்பதாக மோசமாக இருந்தது. அவரது ஐபிஎல் வரலாற்றிலேயே அதுவே மிக மோசமான பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் ஆகும். அதை தொடர்ந்து இப்போது 2025 ஐபிஎல் தொடரிலும் அஸ்வின் சுமாராகவே செயல்பட்டு வருவது கவலை அளிக்கிறது.