சென்னை: 2026 ஐபிஎல் சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அந்த அணியின் ஜாம்பவான் எம்.எஸ். தோனி, ஏப்ரல் மாதம் இறுதி வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தோனி முதல் 2 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம் உறுதி செய்திருந்தது. அவருக்குக் கணுக்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் தற்போது அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இந்நிலையில், தற்போது வெளியான புதிய தகவலின்படி, தோனி இந்த சீசனில் சுமார் 6 போட்டிகள் வரை தவறவிட வாய்ப்புள்ளது. குறிப்பாக ஏப்ரல் 14 அன்று நடைபெற உள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகமாகவே உள்ளது.

இது குறித்து சிஎஸ்கே அதிகாரி ஒருவர் கூறுகையில், "இது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவுதான். இதனை நாங்கள் சமாளித்துதான் ஆக வேண்டும். தோனி தற்போது ஓய்வில் இருக்கிறார், அவர் விரைவில் குணமடைந்து அணிக்குத் திரும்புவார் என நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடுவதற்காகச் சென்னை அணி கவுகாத்தி சென்றுள்ளது. ஆனால் தோனி அணியுடன் செல்லவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தோனி இல்லாத பட்சத்தில், இந்த சீசனில் சென்னை அணியின் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் செயல்பட உள்ளார். ராஜஸ்தான் அணியில் இருந்து ட்ரேடிங் முறையில் சென்னை அணிக்கு வந்த சஞ்சு சாம்சனுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாகும். ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருந்தாலும், மைதானத்தில் தோனியின் வழிகாட்டுதல் சென்னை அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். அந்த வகையில் இப்போது தோனி இல்லாதது சிஎஸ்கே அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, இப்போது ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். 2023-ல் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது கணுக்கால் காயம் ஏற்பட்டுள்ளது. 44 வயதில் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவது சவாலாக இருந்தாலும், தோனி மீண்டும் களத்திற்கு வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏப்ரல் மாதம் முழுவதும் தோனி இல்லாமல் சிஎஸ்கே எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதே இப்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.