சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வலைப்பயிற்சியில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதில் 14.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்ட இளம் வீரர் பிரசாந்த் வீரின் அதிரடியான ஆட்டத்தைப் பார்த்து முன்னாள் கேப்டன் தோனி வியந்து பாராட்டியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், வலைப்பயிற்சியில் பிரசாந்த் வீர் பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்.
அவருக்குப் பின்னால் தோனி நின்று தீவிரமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அப்போது பிரசாந்த் வீர் ஆஃப் சைடில் ஒரு அபாரமான ஷாட் அடித்தவுடன், தோனி உடனடியாக "ஷாட்" என்று சத்தமாகப் பாராட்டுகிறார். அடுத்ததாக ஒரு ஸ்கூப் ஷாட் அடித்தபோது, தோனி அதைத் தொடர்ந்து பார்த்து பவுண்டரி என சைகை காட்டுகிறார். பின்னர் நேராக ஒரு அட்டகாசமான டிரைவ் ஆடியபோதும் தோனி மீண்டும் "ஷாட்" என பாராட்டி உற்சாகப்படுத்துகிறார். இந்த வீடியோ தற்போது சிஎஸ்கே ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

பொதுவாக தோனி எந்தவொரு வீரரையும் அவ்வளவு எளிதாகப் பாராட்டிவிட மாட்டார். சிஎஸ்கே அணியின் ஓய்வறையில் அவரது வார்த்தைகளுக்கு எப்போதும் மிகப்பெரிய மதிப்பு உண்டு. எனவே, அவரது இந்த பாராட்டு சாதாரணமான ஒன்று அல்ல. ஐபிஎல் 2026 ஏலத்தில் 14.2 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டதால், பிரசாந்த் வீர் மீது ரசிகர்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகளும் அழுத்தங்களும் எழுந்துள்ளன.
இவ்வளவு பெரிய விலைக்கு வாங்கப்பட்ட ஒரு வீரர், வலைப்பயிற்சியில் எப்படிச் செயல்படுகிறார் என்பதை அனைவரும் உற்று நோக்குவார்கள். இந்த நெருக்கடியான சூழ்நிலையில், தோனியின் சிறு பாராட்டு கூட அந்த இளம் வீரரின் பதற்றத்தைக் குறைத்து, தன்னம்பிக்கையை பலமடங்கு அதிகரிக்கும். சிஎஸ்கே அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு இதுபோன்று தோனி கொடுக்கும் ஆதரவு மிகப்பெரிய உந்துதலாக அமையும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.

5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் 2026 தொடரில் தனது முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த விறுவிறுப்பான போட்டி வரும் மார்ச் 30 அன்று கவுகாத்தியில் நடைபெறவுள்ளது. வலைப்பயிற்சியில் காட்டிய அதே அதிரடியை பிரசாந்த் வீர் போட்டியிலும் வெளிப்படுத்துவாரா என்பதைக் காண சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
