சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் பேட்டிங் வரிசை குறித்து இந்திய அணியின் மூத்த வீரரான செதேஷ்வர் புஜாரா முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார். ஐபிஎல் 2026 தொடர் நெருங்கி வரும் நிலையில், சிஎஸ்கே அணியின் ஆணிவேராக திகழும் தோனியின் வருகைக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். கடந்த சில சீசன்களாகவே உடல் தகுதி காரணமாக தோனி 8 அல்லது 9வது வீரராகவே களமிறங்கி வருகிறார்.
இதனால் அவருக்கு பேட்டிங் செய்ய மிகக் குறைவான பந்துகளே கிடைக்கின்றன. ஆனாலும், அந்த சில பந்துகளில் இமாலய சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றுவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். இது குறித்து பேசிய செதேஷ்வர் புஜாரா, தோனி 8 அல்லது 9வது வரிசையில் பேட்டிங் செய்வதில் எந்த அர்த்தமும் தமக்குத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தனி ஒருவனாக ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய மிகப்பெரிய திறமை தோனியிடம் இருப்பதாகவும், சிஎஸ்கே அணியில் வேறு எந்த பேட்ஸ்மேனாலும் இப்படிச் செய்ய முடியாது என்றும் அவர் கூறினார். தோனி வெறும் 5 அல்லது 10 பந்துகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, 25 முதல் 30 பந்துகளைச் சந்தித்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் எனவும் புஜாரா தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை வென்றபோது அந்த அணியில் புஜாரா இடம்பெற்றிருந்தார். சிஎஸ்கே அணி வீரர்களுக்கு ஒரு குடும்பம் போன்றது என்றும், அங்கு வீரர்களின் பொறுப்புகள் குறித்து மிகப்பெரிய தெளிவு இருக்கும் என்றும் அவர் அணியின் சூழலை பாராட்டியுள்ளார். இதற்கிடையே சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசுகையில், இந்த சீசனில் தோனி அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவார் என்று தான் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளதால், தோனி விக்கெட் கீப்பராக தொடருவாரா அல்லது வெறும் பேட்ஸ்மேன் அல்லது இம்பேக்ட் பிளேயராக களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தோனியின் இந்த புதிய பங்கு குறித்து பயிற்சியாளர்கள் மற்றும் கிரிக்கெட் நிர்வாக ஊழியர்களே இறுதி முடிவு எடுப்பார்கள் என்று காசி விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார்.