CSK: "நான் சொல்ற ஒரு விஷயத்தைக் கூட..".. கேப்டன் ருதுராஜுக்கு தோனி கொடுத்த 'பவர்ஃபுல்' அட்வைஸ்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது சொந்த பாணியில் அணியை வழிநடத்த வேண்டும் என்றும், தான் சொல்லும் ஆலோசனைகளை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜாம்பவான் தோனி தெரிவித்துள்ளார். ஒரு கேப்டனாக களத்தில் முடிவுகளை எடுக்கும் முழு சுதந்திரம் ருதுராஜுக்கு இருப்பதை அவர் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.
2026 ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான கட்டத்தில் சிஎஸ்கே அணி உள்ள நிலையில், ருதுராஜின் கேப்டன்சி குறித்து தோனி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், "சிஎஸ்கே அணியை உனக்கு எப்படி விருப்பமோ அப்படி நடத்து என்று ருதுவிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். நான் நீண்ட காலமாக இந்த அணியை அப்படித்தான் நடத்தினேன். கிரிக்கெட்டில் எப்போதும் கேப்டன் தான் முடிவுகளை எடுக்க வேண்டும். இது கால்பந்து கிடையாது, அங்கே பயிற்சியாளர் அல்லது மேலாளர் தான் முடிவுகளை எடுப்பார். ஆனால் கிரிக்கெட்டில் மைதானத்தில் இருக்கும் கேப்டன் எடுக்கும் முடிவு தான் இறுதியானது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "நான் உன்னிடம் வந்து பேசுவேன், பல ஆலோசனைகளை வழங்குவேன். ஆனால் அதில் ஒன்றைக்கூட நீ பின்பற்றவில்லை என்றாலும் எனக்கு கவலையில்லை. அது உன் உரிமை. ஒரு கேப்டனாக உன்னிடம் உள்ள வீரர்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது உனக்குத் தான் தெரியும். நான் உனக்கு 10 விஷயங்களைச் சொன்னால், அதில் உனக்குச் சரி எனப் படுவதை மட்டும் எடுத்துக்கொள். எதையும் கட்டாயமாகச் செய்ய வேண்டாம்" எனத் தெரிவித்தார்.
தனது புகழ் குறித்துப் பேசிய தோனி, தான் எப்போதும் ரசிகர்களைக் கவர வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டதில்லை என்றார். "நான் எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும் என்று மட்டுமே விரும்பினேன். அந்த உண்மைத் தன்மை தான் ரசிகர்களை நம் மீது அன்பு செலுத்த வைக்கிறது. சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை கிரிக்கெட்டுக்கு மட்டுமே எப்போதும் முதல் முன்னுரிமை. கிரிக்கெட்டைத் தாண்டிப் பல விஷயங்கள் நம்மைச் சுற்றியிருந்தாலும், விளையாட்டில் இருந்து விலகாமல் இருப்பதே அணியின் பலம்" என்றார்.
இக்கட்டான நேரங்களில் ரசிகர்கள் மைதானத்தில் அளிக்கும் உற்சாகம், வீரர்களுக்கு 10 முதல் 15 சதவீதம் கூடுதல் பலத்தைத் தருவதாகவும் தோனி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். பிளே-ஆப் வாய்ப்புக்காகச் சென்னை அணி போராடி வரும் நிலையில், தோனியின் இந்த முதிர்ச்சியான பேச்சு ருதுராஜ் மற்றும் சிஎஸ்கே வீரர்களுக்குப் புதிய தன்னம்பிக்கையை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications
