CSK: இனி ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு ஃபைனல் மாதிரி.. பிளே ஆப் குறித்து பயிற்சியாளர் ஹஸி கருத்து
லக்னோ: ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தற்போது வாழ்வா சாவா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு, மீதமுள்ள ஒவ்வொரு போட்டியையும் 'இறுதிப் போட்டி'யாகவே கருத வேண்டும் என்று அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி வலியுறுத்தியுள்ளார்.
ஐந்த முறை சாம்பியனான சென்னை அணி, பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற, இனி வரும் இரண்டு லீக் ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும், அத்துடன் மற்ற அணிகளின் முடிவுகளும் சாதகமாக அமைய வேண்டும். ஏற்கனவே பிளேஆஃப் வாய்ப்பை இழந்திருந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராகவே இந்த முக்கியமான தோல்வி ஏற்பட்டது.

மிட்செல் மார்ஷ் வெறும் 38 பந்துகளில் அதிரடியாக 90 ரன்கள் குவித்து, சென்னை நிர்ணயித்த 188 ரன்கள் இலக்கை எளிதாக எட்ட உதவினார். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நடந்த இந்தத் தோல்வி, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணியை 13 ஆட்டங்களில் இருந்து 12 புள்ளிகளுடன் தள்ளாட வைத்துள்ளது. இதனால் எஞ்சிய இரண்டு லீக் ஆட்டங்களும் சென்னைக்கு "வென்றால் அடுத்த சுற்று, தோற்றால் வெளியே" என்ற நிலையை உருவாக்கியுள்ளன.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் மைக்கேல் ஹஸ்ஸி, தற்போதைய நிலவரம் குறித்து பேசினார். "இந்த லீக் சுற்றின் கட்டத்தை நான் மிகவும் விரும்புகிறேன். ஏனெனில் ஒவ்வொரு போட்டியும் இறுதிப் போட்டி போலத்தான் இருக்கும், இப்போது நாங்களும் அத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் இருக்கிறோம்," என்று அவர் குறிப்பிட்டார். "எங்கள் கடைசி இரண்டு ஆட்டங்களில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தினார்.
"நான் புள்ளிப் பட்டியலை அவ்வளவாக ஆராயவில்லை. ஆனால் முதல் நான்கு இடங்களுக்கான கடைசி சில இடங்களுக்குப் பல அணிகள் கடுமையாகப் போராடுகின்றன. இது அனைவருக்கும் அழுத்தம் மிகுந்த கட்டமாகும்; எங்களுக்கு மட்டுமல்ல, மற்ற எல்லா அணிகளுக்கும் கூட இது பொருந்தும். சில சமயம் நம்பமுடியாத விசித்திரமான காரியங்கள் நடப்பதையும் நீங்கள் காணலாம். ஆகவே எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது... நாங்கள் முன்னேற முடியும் என்ற நம்பிக்கை எங்கள் அணியில் இன்னும் இருக்கிறது," என ஹஸ்ஸி உறுதிபடத் தெரிவித்தார்.
"நாங்கள் எங்கள் வேலையை சிறப்பாக செய்ய வேண்டும். ஒருவேளை சில முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும். ஆனால் இதுதான் இந்தத் தொடரின் தன்மை. இது ஒரு மிகச்சிறந்த முடிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன்," என்று ஹஸ்ஸி குறிப்பிட்டார்.
"இது உலகின் சிறந்த தொடர்களில் ஒன்றாகும். ஏனெனில் இந்த தருணத்தில், வெறும் இரண்டு அணிகள் மட்டுமே முற்றிலும் வெளியேறிவிட்டன. எங்களுக்குக் கீழே உள்ள அணிகளுக்குக் கூட, இறுதிப் போட்டிக்கு வர வாய்ப்பு உள்ளது. எனவே இது எல்லா அணிகளுக்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பம்; இதை நாங்கள் அப்படியே அணுகுவோம்," என்றார் ஹஸ்ஸி.
"எங்கள் வீரர்கள் அந்த ரன் எண்ணிக்கையை எட்டுவது ஒரு நல்ல முயற்சி என்று நினைத்தேன், ஏனெனில் அது சவாலாகத் தெரிந்தது," என்றார். இருப்பினும், மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்க்லிஸ் இடையேயான முக்கியமான தொடக்கக் கூட்டணியை ஆரம்பத்திலேயே பிரிக்க பந்துவீச்சாளர்களால் முடியாமல் போனது தோல்விக்குக் காரணம் என அவர் தெரிவித்தார்.
"தனது முழு நம்பிக்கையுடன் இருக்கும்போது மிட்செல் மார்ஷ் எப்போதும் அபாயகரமான வீரர் என்பதை வெள்ளிக்கிழமை அன்றைய ஆட்டத்தில் அவர் காட்டினார். அவர்கள் ஆரம்பத்திலிருந்தே மிக ஆக்ரோஷமாக விளையாடினர். ஒருமுறை அவர்கள் கையை ஓங்கினால், அவர்களை நிறுத்துவது கடினம். மார்ஷ் மற்றும் இங்க்லிஸ் இருவரும் ஆஸ்திரேலியாவில் உள்ள வேகமான, துள்ளலான ஆடுகளங்களில் விளையாடுவதை ரசிப்பார்கள். எனவே அவர்களுக்கு அது ஒரு சிறிய சாதகமாக அமைந்தது."
"ஒருமுறை நம்பிக்கையுடன் விளையாடி போட்டியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால், அவர்களை நிறுத்துவது கடினமாகிவிடும்," என்று அவர் விளக்கினார். "எங்கள் திட்டம் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை வீழ்த்தி, பின்னர் நடு ஓவர்களில் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மிகத் தாமதமாகிவிட்ட பின்னரும் கூட எங்களால் அந்த தொடக்கக் கூட்டணியை பிரிக்க முடியவில்லை," என ஹஸ்ஸி வருத்தம் தெரிவித்தார். ஆரம்பகட்டத்திலேயே விக்கெட்டுகளை எடுக்காததே இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications

