
அண்டர் 19 வீரர்கள்
இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் இளம் படையை உருவாக்கி வருகிறது. அடுத்த பத்து ஆண்டுகளை கருத்தில் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. நடந்து முடிந்த மினி ஏலத்தில் அண்டர் 19 கிரிக்கெட் வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் தட்டி தூக்கியது. இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது நிஷாந்த் சிந்து மற்றும் ஷாயிக் ரஷித் தான்.

தொடர்ந்து 2 சதம்
இந்த நிலையில் நிசாந்த் சிந்து ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது சதத்தை விளாசி அசத்திருக்கிறார். ஒடிசா அணிக்கு எதிராக களமிறங்கிய நிஷாந்த் சிந்து 215 பந்துகளை எதிர்கொண்டு 142 ரன்கள் எடுத்திருக்கிறார். பரோடாவுக்கு எதிராகவும் கடந்த ஆட்டத்தில் அவர் சதம் விளாசியதோடு 3 விக்கெட்களை கைப்பற்றினார். வெறும் 18 வயது ஆன நிஷாந்துக்கு சிஎஸ்கேவில் நல்ல எதிர்காலம் இருப்பதாக கருதப்படுகிறது.

8 விக்கெட்
19 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் நிசாந்த் சிந்து ஆட்டநாயகன் விருது வென்றது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று ரஞ்சி ஆட்டத்தில் நேற்று ஒரு சாதனை நிகழ்ந்திருக்கிறது. இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் அணிகள் மோதிய ஆட்டத்திலே இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. முதலில் பந்து வீசிய உத்தரக்காண்ட் அணி சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக 31 வயது வீரர் தீபக் தபோலா எட்டு ஓவர்கள் வீசி எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

விலை போகவில்லை
அவர் வெறும் 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக இமாச்சல பிரதேச அணி 49 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறது. சிறப்பாக செயல்பட்ட தீபக் தபோலாவை ஜெய்ஷா பாராட்டி இருக்கிறார்.எனினும் தீபக் தபோலா ஐபிஎல் மினி ஏலத்தில் விலை போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











