சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் பதவியில் மெக்குல்லம்? போட்டியில் மேலும் 2 பேர்
சென்னை: சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் விலகியதைத் தொடர்ந்து, புதிய தலைமை பயிற்சியாளராக ஒரு வெளிநாட்டு நிபுணர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ஸ்டீபன் பிளெமிங், 2009 முதல் 2026 வரை சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
கடந்த ஜூலை மாதம் இப்பொறுப்பில் இருந்து விலகிய அவர், இங்கிலாந்து ஆண்கள் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். சிஎஸ்கே அணி நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக புதிய பயிற்சியாளரை அறிவிக்கவில்லை என்றாலும், வெளிநாட்டு நிபுணர் ஒருவர் இப்பொறுப்பை ஏற்பார் என்று சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமை பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் காசி விஸ்வநாதன் மற்றும் சிஎஸ்கே முழுநேர இயக்குனர் ரூபா குருநாத் ஆகியோர் ஈடுபடவுள்ளனர். இதற்காக அவர்கள் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோருடன் கலந்தாலோசித்து இறுதி முடிவை எடுக்கவுள்ளனர். அதன் பின்னரே புதிய வீரமுர்களை ஒப்பந்தம் செய்வது குறித்தும் வர்த்தகம் குறித்தும் ஆலோசிக்கப்படும்.
இதுகுறித்து காசி விஸ்வநாதன் அளித்துள்ள பேட்டியில், "வீரர்களை ஒப்பந்தம் செய்வது குறித்து நாங்கள் இன்னும் யோசிக்கத் தொடங்கவில்லை. முதலில் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்வோம். இந்தத் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பல விருப்பமுள்ள நபர்களிடம் இருந்து எங்களுக்கு அழைப்புகள் வந்துள்ளன. நாங்கள் விரைவில் அமர்ந்து இதனை இறுதி செய்வோம்" என்று கூறியுள்ளார்.
சிஎஸ்கே-வின் புதிய தலைமை பயிற்சியாளருக்கான போட்டியில் இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் பெயரும் அடிபடுகிறது. இவர் இதற்கு முன்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும், தனது ஐபிஎல் பயணத்தின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்கல்லம் தவிர, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் சிஎஸ்கே வீரருமான மைக்கேல் ஹசியும் இந்தப் பதவிக்கான ரேசில் முன்னணியில் உள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் ஹசி, பிளெமிங்கிற்குப் பிறகு இந்த இடத்தை நிரப்ப மிகச்சிறந்த தகுதியான நபர் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் நிபுணர்களும் கருதுகின்றனர்.
மற்றொரு வெளிநாட்டு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஆல்பி மார்கெல் பெயரும் பரிசீலனையில் உள்ளது. ஐபிஎல்லின் ஆரம்ப ஆண்டுகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி பல வெற்றிகளைப் பெற்றுத் தந்த மார்கெல், அண்மையில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் விலகியதைத் தொடர்ந்து அங்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

