சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் கௌஹாத்திக்கு கிளம்பிச் சென்றனர். சிஎஸ்கே அணி வெள்ளிக்கிழமை அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய நிலையில், இரண்டு நாட்களில் அடுத்த போட்டியில் விளையாட உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கௌஹாத்தியில் நடைபெற உள்ள லீக் போட்டியில் மோத உள்ளது.
அதற்காக ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி முடிந்தவுடன் சிஎஸ்கே வீரர்கள் தங்கள் பயணத்தை துவங்கினர். சொந்த மைதானமான சேப்பாக்கத்திலேயே ஆர்சிபி அணிக்கு எதிராக வெற்றி பெறாத சிஎஸ்கே அணி கௌஹாத்தியில் ராஜஸ்தானை வீழ்த்துமா? என்ற கேள்வி உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸும் தான் ஆடிய முதல் இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. அதிலும் கௌஹாத்தி அந்த அணியின் இரண்டாவது சொந்த மைதானம் ஆகும். அந்த அணியின் தற்காலிக கேப்டனாக இருக்கும் ரியான் பராக்-கின் சொந்த ஊரும் அதுதான். அங்கு அந்த அணி தோல்வி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்துள்ளது.
மறுபுறம் சிஎஸ்கே அணியும் தனது சொந்த மைதானத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்த இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. எப்படியும் இரண்டில் ஒரு அணி வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும். கௌஹாத்தி மைதானமும் கிட்டத்தட்ட சிஎஸ்கே மைதானம் போலவே உள்ளது.
அங்கும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சரி சமமான வாய்ப்பு உள்ளது. அங்கு நடந்த முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி இருந்தது. அங்கு முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தது. அதை சேஸிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.
அந்த மைதானத்தில் 180 ரன்களுக்கு மேல் எடுத்தால் அது நல்ல ஸ்கோர் என கூறப்படுகிறது. எனவே, சிஎஸ்கே அணி அங்கு பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தினால் வெற்றி பெற முடியும். சேப்பாக்கத்தில் விளையாடியது போல தவறான ஷாட்களை ஆடி ஆட்டமிழப்பது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை அளிக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோத உள்ள லீக் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.