சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி தோல்விகளைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர், அணி நிர்வாகத்தினருடனும், தோனி உள்ளிட்ட மூத்த வீரர்களுடனும் கூட்டம் நடத்தப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ளது தான் இதில் குறிப்பிடத்தக்கது. எதற்காக இந்த திடீர் கூட்டம்?
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கியது. ஆறாவது முறையாக அந்தக் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சிஎஸ்கேவில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் அணியில் இடம் பெற்றிருந்தார். மேலும் அந்த அணி ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டதாக பலரும் நினைத்தனர்.

வழக்கம்போல சிஎஸ்கே அணி அனுபவ வீரர்களை வைத்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எல்லாமே தலைகீழாக மாறியது. ஐபிஎல் தொடர் துவங்கியது முதல் சிஎஸ்கே அணியில் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்துமே சொதப்பியது.
மேலும் கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தோனி மீண்டும் கேப்டனாகப் பொறுப்பேற்றார். அதன் பின்னர் சிஎஸ்கே அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்துள்ளது.
எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர் பல முறை மாற்றி அமைக்கப்பட்டது. இது எந்த அளவுக்கு சென்றது என்றால் ஆல் ரவுண்டர் சாம் கரன் மூன்றாம் வரிசையிலும், ரவீந்திர ஜடேஜா நான்காம் வரிசையிலும் களமிறங்கும் அளவுக்கு சென்றது.
இதனிடையே அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா? என்ற சந்தேகமும் உள்ளது. அவர் ஓய்வு பெற்றால் அதன் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலை என்ன? என்ற கேள்வி உள்ளது. இந்த ஆண்டு மீதமுள்ள 5 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கடினமே.
இந்த சூழ்நிலையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர், அந்த அணி நிர்வாகத்துடன் தோல்விக்கான காரணம் குறித்து விசாரிக்க உள்ளதாக சுரேஷ் ரெய்னா சுட்டிக்காட்டியுள்ளார். 43 வயதான தோனியை மட்டும் தோல்விக்கு காரணமாக சொல்ல முடியாது. அவர் பேட்டிங்கில் சரியாக ரன் குவிக்கவில்லை என்றாலும், விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்சியில் சரியாகவே செயல்படுகிறார்.
"ஆனால் ஏலத்தில் நடந்த அணித் தேர்வில்தான் சிஎஸ்கே அணி மிகப்பெரிய தவறு செய்துள்ளது" என்றும், "மேலும், தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து சரியாகச் செயல்படவில்லை. அதுதான் முதல் பிரச்சனையாக உள்ளது. அது குறித்து உரிமையாளர் கூட்டத்தில் விவாதிக்கப்படும்" எனவும் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.