
ரெய்னா ஆர்வம்
2020 ஐபிஎல் தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் ஆறு நாள் பயிற்சி முகாம் நடத்திய போது அதில் ஆர்வமாக கலந்து கொண்டார் சுரேஷ் ரெய்னா. ஜடேஜா, ஹர்பஜன் சிங் போன்ற வீரர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளாத நிலையில், ரெய்னா மற்ற வீரர்களுடன் ஆர்வத்துடனே கலந்து கொண்டார்.

13 பேருக்கு கொரோனா
ஆகஸ்ட் 21 அன்று அணியுடன் துபாய் சென்றார். ஒரு வார குவாரன்டைன் முடிவில் சிஎஸ்கே அணியில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது. அது குறித்து அனைவரும் பேசி வந்த நிலையில், ரெய்னா குறித்த அதிர்ச்சி செய்தி வெளியானது.

உறவினர் தாக்குதல்
முதலில் சுரேஷ் ரெய்னா தன் உறவினர் ஒருவர் தாக்குதலில் பலியானதால் இந்தியா திரும்பினார் என்றார்கள். பின்னர், சிஎஸ்கே முகாமிற்குள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் அந்த அச்சத்தில் அவர் தோனி, ஸ்டீபன் பிளெம்மிங் உள்ளிட்டோருடன் விடாமல் தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்பட்டது.

அச்சம்
ரெய்னாவின் அச்சத்தை போக்க முடியாததால் அவரை இந்தியாவுக்கே சிஎஸ்கே நிர்வாகம் அனுப்பி வைத்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது இதற்கு முன் நடந்த சம்பவம் ஒன்றை பற்றி அவுட்லுக் பத்திரிக்கையில் செய்தி வெளியாகி உள்ளது.

பால்கனி இல்லை
சுரேஷ் ரெய்னா துபாய் சென்றது முதல் தனக்கு வழங்கப்பட்ட அறை குறித்து அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. தன் அறையில் பால்கனி இல்லை என அவர் புகார் கூறியதாகவும், தோனிக்கு வழங்கப்பட்ட அறை போன்றே தனக்கும் அறை வழங்குமாறு கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தோனி சொல்லியும் கேட்கவில்லை
இந்த விவகாரத்தில் தோனி சொல்லியும் கேட்காமல் ரெய்னா புகார் கூறிக் கொண்டே இருந்ததாகவும், அதன் பின் அணியில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது அவரை இன்னும் பயத்தில் ஆழ்த்தவே யார் சொல்லியும் சமாதானம் ஆகாமல் அவர் இந்தியா திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

சீனிவாசன் விளாசல்
இந்த தகவல்கள் வெறுமனே வெளியாகி இருந்தால் வதந்தி என ஒதுக்கித் தள்ளி இருக்கலாம். ஆனால், சிஎஸ்கே அணி உரிமையாளர் சீனிவாசன் இந்த தகவல்களை நேரடியாக கூறாமல் ரெய்னாவை விளாசி பேட்டி கொடுத்துள்ளார்.

பழைய காலத்து நடிகர்கள்
சீனிவாசன் பேட்டியைப் பார்த்த ரசிகர்கள் இது உண்மைதானோ என எண்ணி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். சீனிவாசன் இது குறித்து கூறுகையில், "பழைய காலத்து நடிகர்கள் போல கிரிக்கெட் வீரர்கள் தங்களைச் சுற்றியே சிந்திக்கிறார்கள்." என குறிப்பிட்டார்.

சென்று விடுங்கள்
"சென்னை சூப்பர் கிங்ஸ் எப்போதும் ஒரு குடும்பம் போல. அனைத்து மூத்த வீரர்களும் எப்படி ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்பதை அறிந்தவர்கள். உங்களுக்கு தயக்கம் இருந்தால், மகிழ்ச்சியாக இல்லை என்றால் சென்று விடுங்கள்." எனக் கூறினார் சீனிவாசன்.

வெற்றி தலைக்குள் ஏறி விடும்
"நான் யாரையும் எதையும் செய்யுமாறு வற்புறுத்த மாட்டேன். சில சமயம் வெற்றி உங்கள் தலைக்குள் ஏறி விடும்." என சுரேஷ் ரெய்னா பெயரை குறிப்பிடாமல் தாக்கிப் பேசினார் சீனிவாசன். மேலும், சிஎஸ்கே அணியில் அனைத்தும் கட்டுப்பாட்டில் இருப்பதாக கேப்டன் தோனி கூறியதாகவும் கூறினார் அவர்.


Click it and Unblock the Notifications