CSK அணிக்கு அடுத்த அடி.. முக்கிய வீரர் விலகல்.. பிளே ஆப் நெருங்கும் வேளையில் துரதிர்ஷ்டம்
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்ற நிலையில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தற்போது மிகப்பெரிய மரண அடி விழுந்துள்ளது. ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு மிக முக்கிய வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர், திடீர் காயம் காரணமாக தனது சொந்த நாட்டிற்குத் திரும்பியுள்ளார். கோப்பையை வெல்லும் கனவில் இருந்த சிஎஸ்கே அணிக்கு இது மிகப் பெரிய பின்னடைவாக மாறி உள்ளது.
2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெறவில்லை. லீக் சுற்றில் அந்த அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. இதில் அடுத்தடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளை எதிர்கொள்ள வேண்டிய சவால் சிஎஸ்கே அணிக்கு உள்ளது. இதில் குறைந்தது 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே நெட் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் சுற்றை நினைத்தே பார்க்க முடியும். மூன்று போட்டிகளிலும் வென்றால் உறுதியாக தகுதி பெற முடியும் என்ற நிலை உள்ளது.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தான், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன் வலது தொடையில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி அவசரமாக சொந்த நாடு திரும்பியுள்ளார். இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய அவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணிக்கு பெரும் பலமாக திகழ்ந்தார்.
சில நாட்களுக்கு முன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 36 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ஆட்டத்தின் திருப்புமுனையாக அதிரடி வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியதாலேயே சிஎஸ்கே அணி அந்தப் போட்டியில் த்ரில்லர் வெற்றி பெற்றது.
தற்போது ஜேமி ஓவர்டனுக்கு லண்டனில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளதால், அவர் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சீசன் முழுவதுமே சிஎஸ்கே அணிக்கு காயம் பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. ஏற்கனவே முன்னணி வீரர்களான கலீல் அகமது, ராமகிருஷ்ணா கோஷ், ஆயுஷ் மாத்ரே, நாதன் எல்லிஸ் ஆகியோர் காயத்தால் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கு நடுவில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் காயம் காரணமாக இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. பந்துவீச்சில் நம்பிக்கை அளித்த இருந்த ஜேமி ஓவர்டனும் தற்போது விலகியுள்ளது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். தொடர் காயங்களால் நிலைகுலைந்துள்ள சிஎஸ்கே அணி, இந்த பெரும் தடையை தாண்டி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications