புனே: இரண்டாண்டுகளுக்குப் பின் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள சிஎஸ்கே அணி, தனது புதிய சொந்த மண்ணான புனேயில், தனது முதல் போட்டியை நாளை விளையாட உள்ளது.
திருவிளையாடல் படத்தில் வரும் வசனம் போல, சேர்ந்தே இருப்பது என்றால், ஐபிஎல்லும், சிஎஸ்கேவும் என்றே கூறலாம். அவ்வாறு ஐபிஎல் டி-20 கிரிக்கெட் வரலாற்றில் சிஎஸ்கேவின் பங்கு முக்கியமானது.
சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் இரண்டாண்டுகள் தடை நீங்கி மீண்டும் களமிறங்கியுள்ளன. 10 சீசன்களைத் தாண்டி 11வது சீசன் நடந்து வரும் நிலையில், இந்தாண்டு ஐபிஎல் மீது தனி ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே அணியும், அதன் கேப்டன் டோணியும்தான். இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடக்கிறது என்பதால், ரசிகர்களும், மே 20ம் தேதி நடக்க உள்ள போட்டிக்கு வரை டிக்கெட்களை வாங்கி தயாராக இருந்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் பிரச்னையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதையடுத்து சிஎஸ்கே சென்னையில் விளையாடும் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன.
கடந்த, 10 சீசன்களில் சிஎஸ்கே 134 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 80ல் வென்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 39 போட்டிகளில் 26ல் வென்றுள்ளது.
இந்த நிலையில், சிஎஸ்கேவின் ஹோம் கிரவுண்ட் சேப்பாக்கத்தில் இருந்து புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தன்னுடைய புதிய சொந்த மைதானத்தில் நாளை நடக்கும் முதல் போட்டியில் ராஜஸ்தானை சிஎஸ்கே சந்திக்க உள்ளது.