IPL 2026: சிஎஸ்கே பிளே-ஆஃப் போவதில் என்ன சிக்கல்? CSK vs DC போட்டியில் தோற்றால் என்ன நடக்கும்?
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான தொடக்கத்தைச் சந்தித்துள்ளது. தான் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் வரிசையாகத் தோல்வியடைந்துள்ள சென்னை அணி, தனது 4வது லீக் ஆட்டத்தில் டில்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் 0 புள்ளிகளுடன் சென்னை அணி கடைசி இடமான 10வது இடத்தில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாத அணிகளாக கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே உள்ளன. கொல்கத்தா அணி ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டதால் கிடைத்த 1 புள்ளியுடன் 9வது இடத்தில் உள்ளது. ஆனால், சிஎஸ்கே அணியின் நெட் ரன் ரேட் மைனஸ் 2.517 என்ற மிக மோசமான நிலையில் உள்ளது ரசிகர்களைக் கவலையடையச் செய்துள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே அணி தோல்வியடைந்தால் பிளே-ஆப் வாய்ப்பு முடிந்துவிடுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் தற்போதைய ஐபிஎல் விதிமுறைப்படி, ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். இதில் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற ஒரு அணி குறைந்தபட்சம் 7 அல்லது 8 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
சென்னை அணிக்கு இன்னும் 11 போட்டிகள் மீதமுள்ளன. இதில் குறைந்தது 8 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் வாய்ப்பை உறுதியாகத் தக்கவைக்க முடியும். கணித ரீதியாகப் பார்த்தால், ஒரு அணி தொடக்கத்தில் 7 போட்டிகளில் தோல்வியடைந்து, அதன் பிறகு மீதமுள்ள 7 போட்டிகளில் தொடர்ந்து வென்றால் கூட பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உண்டு.
இருப்பினும், தொடர் தோல்விகள் வீரர்களின் மனநிலையைப் பாதிக்கும். மேலும், ஒவ்வொரு தோல்வியும் நெட் ரன் ரேட்டை மேலும் மோசமாக்கும். பிளே-ஆப் சுற்றுக்கான பந்தயத்தில் இரண்டு அணிகள் சமமான புள்ளிகளுடன் இருக்கும்போது இந்த ரன் ரேட் தான் முடிவைத் தீர்மானிக்கும். எனவே, சென்னை அணி இனி வரும் போட்டிகளில் வெற்றி பெறுவதுடன், பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய அழுத்தத்திலும் உள்ளது. பிளே-ஆப் கனவைத் தக்கவைக்க சென்னை அணி இப்போது இருந்தே தனது வெற்றிப் பயணத்தைத் தொடங்க வேண்டும். இல்லையெனில் கடந்த ஆண்டைப் போலவே 10வது இடத்தைப் பிடிக்கும் அபாயம் உள்ளது.


Click it and Unblock the Notifications