CSK: டெல்லி அணியை சிஎஸ்கே வீழ்த்தினால் பிளே ஆப் செல்ல முடியுமா? தோற்றால் என்ன நடக்கும்?
சென்னை: 2026 ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள அணிகள் 12 புள்ளிகளுக்கு மேல் பெற்று பிளே ஆப் ரேசில் முன்னிலையில் இருக்க, மீதமுள்ள ஒரு இடத்திற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை நடைபெறுகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே-வின் பிளே ஆப் வாய்ப்பு எப்படி இருக்கும், ஒருவேளை தோற்றால் என்ன நடக்கும் என்பது குறித்த முழுமையான அலசலை இங்கே காண்போம்.
தற்போதைய நிலை என்ன?
புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அதேசமயம் டெல்லி கேபிடல்ஸ் அணியும் 9 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணி +0.005 பெற்று டெல்லியை விட -0.895 சற்று முன்னிலையில் இருக்கிறது. பஞ்சாப், பெங்களூரு, ஹைதராபாத், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய 5 அணிகளும் 12 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதால், சிஎஸ்கே அணி அடுத்த சுற்றுக்குச் செல்ல இனி வரும் ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமானது.

வென்றால் என்ன நடக்கும்?
சிஎஸ்கே அணி இன்றைய போட்டியில் டெல்லியை வீழ்த்தினால், 10 போட்டிகளில் 10 புள்ளிகளைப் பெறும். இருப்பினும் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திலேயே நீடிக்கும். ஏனெனில் 5-வது இடத்தில் உள்ள குஜராத் அணி ஏற்கனவே 12 புள்ளிகளுடன் உள்ளது. வெற்றி பெற்றால் சிஎஸ்கே அணிக்கு இன்னும் 4 போட்டிகள் மீதமிருக்கும். பிளே ஆப் சுற்றுக்கு பாதுகாப்பாகத் தகுதி பெற 16 புள்ளிகள் தேவை என்பதால், மீதமுள்ள 4 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்றால் சிஎஸ்கே அடுத்த சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பு கிடைக்கும்.
தோற்றால் ஏற்படும் விபரீதம்
ஒருவேளை இன்று டெல்லி அணியிடம் சிஎஸ்கே தோற்க நேரிட்டால், அது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும். டெல்லி அணி 10 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு முன்னேறும், சிஎஸ்கே அணி 7-வது இடத்திற்குத் தள்ளப்படும். தோற்றால் சிஎஸ்கே அணிக்கு மீதமுள்ள 4 போட்டிகளுமே 'இறுதிப் போட்டி' போல மாறிவிடும். அதாவது, பிளே ஆப் செல்ல வேண்டுமானால் அந்த 4 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற இக்கட்டான சூழல் உருவாகும். ஒரு போட்டியில் தோற்றால் கூட மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ரன் ரேட் முக்கிய பங்கு வகிக்கும்
சிஎஸ்கே அணியின் பிளே ஆப் கனவில் ரன் ரேட் ஒரு முக்கிய காரணியாக இருக்கும். தற்போது டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளை விட சிஎஸ்கே அணி நல்ல ரன் ரேட் வைத்துள்ளது. எனவே இந்தப் போட்டியில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், அது புள்ளிப்பட்டியலில் சமமான புள்ளிகள் வரும்போது சிஎஸ்கே அணிக்குக் கைகொடுக்கும். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே படை தனது முழு பலத்தையும் காட்டி பிளே ஆப் ரேசில் நீடிக்குமா?


Click it and Unblock the Notifications
