மும்பை: சிஎஸ்கே அணியின் 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேவுக்கு மீண்டும் ஒரு அற்புதமான வாய்ப்பு தேடி வந்துள்ளது. ஏற்கனவே இந்திய யு19 அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஆயுஷ் மாத்ரே, அடுத்ததாக மும்பை அணியை வழிநடத்த உள்ளார். தமிழ்நாட்டில் தொடங்கும் புச்சிபாபு தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியதால், மாற்று வீரராக 17 வயதாகும் மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரே ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல் இன்னிங்ஸிலேயே அதிரடியாக ஆடி ரசிகர்களை கவர்ந்த ஆயுஷ் மாத்ரே, 7 இன்னிங்ஸில் விளையாடி 240 ரன்களை குவித்தார். ஃபீல்டிங்கிலும் அசத்தலாக செயல்பட்டு தோனியின் பாராட்டுக்களை பெற்றார்.

இதனால் ஆயுஷ் மாத்ரேவை ரீடெய்ன் செய்யும் முடிவில் சிஎஸ்கே அணி இருக்கிறது. இதன்பின் ஆயுஷ் மாத்ரே வேகமாக வளர்ந்து வருகிறார். இந்திய யு19 அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம் செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் ஆயுஷ் மாத்ரே தலைமையில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் ஆடியது.
அதிலும் டெஸ்ட் தொடரில் ஆயுஷ் மாத்ரே அடுத்தடுத்து 2 சதங்களை விளாசி அசத்தினார். கேப்டனாகவும் ஆயுஷ் மாத்ரேவின் செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா பயணிக்க உள்ள இந்திய யு19 அணிக்கு மீண்டும் கேப்டனாக நியமனம் செய்யப்பட உள்ளார்.
இந்த நிலையில் ஆயுஷ் மாத்ரேவை தேடி மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் புச்சிபாபு தொடர் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்க உள்ளது. கடந்த முறை இந்த தொடரில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கோவை மைதானங்களில் இவர்கள் விளையாடியது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தற்போது புச்சிபாபு தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆயுஷ் மாத்ரேவுக்கு கீழ் சர்ஃபராஸ் கான், முஷீர் கான் ஆகியோர் விளையாட உள்ளனர். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வீரர், 17 வயது வீரருக்கு கீழ் ஆடவிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் மூலமாக ஆயுஷ் மாத்ரே தனது திறமையை நிரூபிக்க அற்புதமான வாய்ப்பு அமைந்துள்ளது. சிஎஸ்கே அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்த ஆயுஷ் மாத்ரே அவரது வாழ்க்கையில் உச்சத்தை எட்டி வருகிறார். இதனால் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பின் அடுத்த கேப்டனும் தயார் என்று சிஎஸ்கே ரசிகர்களும் குஷியாகி இருக்கின்றனர்.