மான்செஸ்டர்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் ஆல்-ரவுண்டரான ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் ஏன் இந்த மாற்றம் செய்யப்பட்டது?
தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மூன்றாவது டெஸ்டில் மீண்டும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. மான்செஸ்டரில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. அந்தப் போட்டியில், சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் அபாரமான சதங்களால் இந்தியா தோல்வியிலிருந்து தப்பித்து போட்டியை டிரா செய்தது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், தோள்பட்டை மற்றும் தொடைப்பகுதி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். மேலும், வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமை காரணமாக, அணியை வலுப்படுத்தும் நோக்கில் ஜேமி ஓவர்டன் தற்போது சேர்க்கப்பட்டுள்ளார். இவர் யாருக்குப் பதிலாக அணியில் இடம் பெறுவார் என்பது இன்னும் முடிவாகவில்லை. பென் ஸ்டோக்ஸ் விளையாட முடியாத பட்சத்தில் அவருக்கு மாற்றாகவோ அல்லது மற்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வளிக்கும் விதமாகவோ ஜேமி ஓவர்டன் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி, லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் ஜூலை 31, 2025 அன்று தொடங்குகிறது.
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாக் க்ராலி, லியாம் டாசன், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஆலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ்.