மும்பை: ஐபிஎல் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வென்றுள்ள நிலையில், சொந்த ஊர் திரும்பிய நட்சத்திர வீரர் துஷார் தேஷ்பாண்டேவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இதையடுத்து சென்னை அணி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியின் வீரர்கள் அனைவரும் பல்வேறு வகையில் வெற்றிக்கு உதவியாக அமைந்துள்ளனர். அந்த வகையில் சிஎஸ்கே அணியின் இளம் வீரர் துஷார் தேஷ்பாண்டே மிடில் ஓவர்களில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 16 போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடியுள்ள துஷார் தேஷ்பாண்டே, 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
முதல் சில போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை துஷார் தேஷ்பாண்டே வெளிப்படுத்தி இருந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு தோனியின் நம்பிக்கையை காப்பாற்றினார். இந்த நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற பின் துஷார் தேஷ்பாண்டே சொந்த ஊரான மும்பைக்கு சென்றுள்ளார்.
அங்கு தனது வீட்டை நெருங்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவரும் சூழ்ந்து கொண்டு துஷார் தேஷ்பாண்டேவுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இதனை எதிர்பாராத துஷார் தேஷ்பாண்டே காரின் வெளியே வந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீட்டிற்கு சென்றுள்ளார். துஷார் தேஷ்பாண்டேவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.