சென்னை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி சார்பாக இம்பேக்ட் பிளேயராக துஷார் தேஷ்பாண்டே களமிறக்கப்பட்டுள்ளார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் இம்பேக்ட் பிளேயராக வந்த துஷார் தேஷ்பாண்டே, 51 ரன்களை விட்டுக் கொடுத்ததால் அதிக விமர்சனங்களை சந்தித்தார்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 6வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே உள்ளிட்டோரின் அதிரடியான ஆட்டத்தால் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. லக்னோ அணி தரப்பில் ரவி பிஷ்னாய் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து லக்னோ அணி சேஸிங்கை தொடங்கியுள்ளது. கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மேயர்ஸ் அதிரடியாக விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அணியின் இம்பேக்ட் பிளேயராக ராயுடுவுக்கு பதிலாக துஷார் தேஷ்பாண்டே களமிறக்கப்பட்டுள்ளார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் இம்பேக்ட் பிளேயராக இவர் களமிறங்கி இருந்தார். 4 ஓவர்களில் 51 ரன்கள் விட்டுக் கொடுத்ததால், ரசிகர்களால் அதிகமாக விமர்சிக்கப்பட்டிருந்தார்.
தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் துஷார் தேஷ்பாண்டே மீண்டும் இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டுள்ளது கேள்வியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் துஷார் தேஷ்பாண்டே சென்னை அணிக்காக 4வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 2 நோ-பால், 3 வொய்டுகள், ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என்று மொத்தமாக 18 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால் இன்பேக்ட் பிளேயராக வந்த துஷார் தேச்க்பாண்டே, யாருக்கு இம்பேக்ட் பிளேயராக விளையாடி வருகிறார் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.