ராஜ்கோட்: ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஒரு புகைப்படத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளனர்.
ஐபிஎல் 9வது சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு மட்டும் சோகமான சீசனாக அமைந்துவிட்டது. ஸ்பாட் பிக்சிங், பெட்டிங் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் விளையாட சென்னை அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை டிவியில் பார்க்கும்போது எல்லாம் சென்னை அணி இல்லையே என்ற வருத்தம் ரசிகர்களுக்கு உள்ளது. இருப்பினும் மனதை தேற்றிக் கொண்டு போட்டியை காண்கிறார்கள்.
சென்னை அணியின் கேப்டனான டோணி ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் புனே அணியின் ரசிகர்களாகிவிட்டனர். நேற்று டோணி அணியும் சிஸ்கேவில் இருந்த ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியும் மோதியபோது அய்யோ இவர்கள் எல்லாம் ஒரே அணியில் விளையாட வேண்டியவர்களே என்று சென்னை ரசிகர்களுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
மெக்கல்லம் ரன்களை குவிக்கையில் இதெல்லாம் எங்க சென்னை அணிக்கு வர வேண்டிய ரன்களாச்சே என்று ரசிகர்கள் குமுறினர். இருப்பினும் நம்ம ரெய்னா அணி தானே என சமாதானம் அடைந்தனர்.
இந்நிலையில் சென்னை அணிக்கு விளையாடிய வீரர்கள் சிறப்பு போட்டோஷூட்டிற்காக ஒன்று கூடினர். சிஎஸ்கே குடும்பம் ஒன்று கூடியதை பார்த்த சென்னை ரசிகர்களுக்கு கண் கலங்கிவிட்டது.