அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வென்று 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சிஎஸ்கே வீரர்கள், வெற்றிக்கு பின் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட் தனது எதிர்கால மனைவிடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி 5வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி அசத்தினார். இந்த வெற்றியால் எமோஷனலான தோனி, ஜடேஜா தூக்கி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த வெற்றியையடுத்து சென்னை அணி வீரர்கள் மைதானத்திலேயே வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொண்டாட்டத்தின் போது சென்னை அணி வீரர்களின் மனைவி மற்றும் குழந்தைகளும் பங்கெடுத்தனர். அதேபோல் விரைவில் திருமணம் செய்யவுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தனது காதலியையும் மைதானத்திற்கு அழைத்து கோப்பையுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதேபோல் ஐபிஎல் கோப்பையை அனுபவ வீரர் ரஹானே முதல்முறையாக வென்றுள்ளார். 15 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர், முதல்முறையாக வென்றபின் கோப்பையுடன் மிகவும் எமோஷனலாக காணப்பட்டார். அவருடன் மனைவி ராதிகாவும் இணைந்துகொள்ள அந்தத் தருணத்தை சிஎஸ்கே நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தமான கான்வெ, திருமணத்திற்காக நாடு திரும்பினார். புது மாப்பிள்ளையான அவர், திருமணம் முடிந்த கையோடு சென்னை அணிக்காக விளையாட வந்தார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை கான்வே சென்னை அணிக்கு வென்று கொடுத்தார். இதையடுத்து கான்வே, தனது மனைவி கிம் வாட்சனுடன் இணைந்து கோப்பையுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
அதேபோல் 2021ஆம் ஆண்டு சிஎஸ்கே போட்டியின் போது தனது தோழியான ஜெயா பரத்வாஜிடம் சென்னை அணியின் தீபக் சஹர் தனது காதலை வெளிப்படுத்தினார். அதையடுத்து கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். கடந்த ஆண்டு காயம் காரணமாக தீபக் சஹர் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத நிலையில், திருமணத்திற்கு பின் ஆடிய முதல் சீசனிலேயே கோப்பையை வென்றுள்ளார். இந்த வெற்றிக்கு பின் தீபக் சஹர் மனைவி ஜெயாவிடம் கொடுத்த போஸ்களை சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அதேபோல் சிஎஸ்கே வெற்றிக்கு காரணமாக இருந்த ஜடேஜா, தனது மனைவி ரிவாபாவுடன் கொண்டாடினார். அதேபோல் வெற்றிக்கு பின் மைதானத்திற்கு வந்த மனைவி சாக்ஷி மற்றும் குழந்தை ஸிவாவுடன் தோனி சில நிமிடங்கள் விளையாடினார். இவர்களின் புகைப்படங்கள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.