சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாற்றத்தை சந்தித்து வரும் நிலையில், அந்த அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என பலரும் பேசி வருகின்றனர். அதில் அதிரடியாக ரவிச்சந்திரன் அஸ்வினை அணியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் சிஎஸ்கே ரசிகர்களே சுட்டிக் காட்டி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமும் உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமானது என்ற ஒரு எண்ணம் அனைவருக்கும் உள்ளது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதல் அங்கு சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் மட்டுமே அமைக்கப்படுவதில்லை.

மாறாக, சில சமயம் பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு சரிசமமான வாய்ப்பு அளிக்கும் பிட்ச்சும் உருவாக்கப்படுகிறது. எனவே, சூழ்நிலைக்கேற்ப பிளேயிங் லெவனை சென்னை சேப்பாக்கத்தில் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. அது மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 7 போட்டிகளை மட்டுமே சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும். மீதமுள்ள போட்டிகளை வேறு மைதானங்களில் தான் விளையாடும்.
தற்போது சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று வருகின்றனர். ஆனால், இந்த போட்டிகள் அனைத்திலும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் நிச்சயம் தேவையா? என்ற கேள்வியும் உள்ளது.
மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் ஒன்றாக ஆடியே ஆக வேண்டும் என்பது வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் ஒரு பிளேயிங் லெவனாக இருக்கிறது என விமர்சகர்கள் சிலர் சுட்டிக்காட்டி உள்ளனர். ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதாலும், முக்கியமானவர்கள் என்பதும் மட்டுமே போதாது.
2025 ஐபிஎல் ஏலத்தில் அஸ்வினை 9.75 கோடி என்ற பெரிய தொகைக்கு சிஎஸ்கே நிர்வாகம் வாங்கி இருக்கிறது, பல ஆண்டுகளுக்கு பின் அவர் சிஎஸ்கேவுக்கு வந்து இருக்கிறார் என்பன போன்ற காரணங்களால் மட்டுமே ஆட வைக்க முடியாது. ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் கைகொடுப்பார் என்பதால் அவரை அணியில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் தேவையில்லை என்றால் நிச்சயம் அஸ்வினை நீக்க வேண்டும்.
நூர் அகமது இதுவரை சிறப்பாக பந்துவீசி இருக்கிறார். மூன்று போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் இருக்கிறார். எனவே, அவரை நீக்க முடியாது. ஆல்ரவுண்டராக இருக்கும் ரவீந்திர ஜடேஜாவையும் நீக்க முடியாது. எனவே, ரவிச்சந்திரன் அஸ்வினை தான் நீக்க வேண்டும். அவர் மூன்று போட்டிகளில் விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். அதிக ரன்களையும் வாரி இறைத்துள்ளார்.
அஸ்வினுக்கு ஏலத்தில் 9.75 கோடி கொடுக்கப்பட்டது என்ற காரணத்துக்காகவும், அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைந்து இருக்கிறார் என்ற காரணத்துக்காக மட்டுமே அஸ்வினை அணியில் சேர்க்க முடியாது என சுட்டிக்காட்டி உள்ளனர். மேலும், மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் அவசியம் என்றாலும் கூட அஸ்வினுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் கோபாலுக்கு வாய்ப்பு அளித்து பார்க்கலாம். ஏனெனில், அஸ்வின் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் ரசிகர்கள்.