IPL 2026: சிஎஸ்கே பிளே-ஆஃப் போவதில் என்ன பிரச்சனை? இன்னும் 4 போட்டிகளில் எத்தனை புள்ளிகள் தேவை?
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி உள்ளது என்று பார்க்கலாம். மே 6 புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஹைதராபாத் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தப் புதிய மாற்றத்தால் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆப் கனவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா அல்லது இன்னும் வாய்ப்பு மிச்சமிருக்கிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் உள்ள அணிகள் 12 புள்ளிகளைத் தாண்டிவிட்ட நிலையில், சிஎஸ்கே கடக்க வேண்டிய சவால்கள் என்ன, அந்த 'மேஜிக் நம்பர்' 16-ஐ சென்னை எட்டுமா?
மே 6 இரவு நிலவரப்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பெங்களூரு, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மூன்று அணிகளும் தலா 12 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று 6-வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே-வின் ரன் ரேட் +0.151 ஆக இருப்பது ஒரு சிறிய ஆறுதல் என்றாலும், இனி வரும் போட்டிகள் ஒவ்வொன்றும் வாழ்வா சாவா போராட்டமே.

சிஎஸ்கே அணிக்கு இன்னும் 4 லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு எந்தவிதச் சிக்கலும் இன்றி தகுதி பெற வேண்டுமானால் ஒரு அணிக்குக் குறைந்தது 16 புள்ளிகள் தேவை. அதாவது, மீதமுள்ள 4 போட்டிகளில் சிஎஸ்கே 3 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் மிக எளிதாக முதல் இரண்டு இடங்களுக்குள்ளேயே நுழைய முடியும். ஆனால், 2 போட்டிகளில் மட்டும் வென்று 14 புள்ளிகளுடன் நின்றால், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
சிஎஸ்கே அணியின் அடுத்த 4 போட்டிகள் யாருடன் தெரியுமா? மே 10 மற்றும் மே 15 ஆகிய தேதிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை இருமுறை எதிர்கொள்கிறது சிஎஸ்கே. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் லக்னோவை வீழ்த்துவது சென்னைக்குச் சற்று எளிதாக இருக்கலாம். ஆனால், மே 18 அன்று முதலிடத்தில் இருக்கும் பலமான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும், மே 21 அன்று 12 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியையும் சிஎஸ்கே எதிர்கொள்ள வேண்டும். இந்த இரண்டு போட்டிகளுமே சிஎஸ்கே-வின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஆட்டங்களாக அமையும்.
தற்போதைய சூழலில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளன. எனவே சிஎஸ்கே தனது ரன் ரேட்டை மேலும் உயர்த்த வேண்டியது அவசியம். குறிப்பாக லக்னோவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் முன்னேற முடியும். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே படை, இழந்த வேகத்தை மீட்டு எடுத்து பிளே ஆப் சிம்மாசனத்தில் அமருமா என்பதை இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications