CSK: இப்பக்கூட சிஎஸ்கே பிளே-ஆப் போக முடியும் ஆனால்.. புள்ளிப்பட்டியல் கணக்கு.. நூலிழையில் வாய்ப்பு
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவதில் மிகப்பெரிய சிக்கலைச் சந்தித்துள்ளது. இந்தத் தோல்வியின் மூலம் ஹைதராபாத் அணி தனது பிளே-ஆப் இடத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ள நிலையில், சிஎஸ்கே அணி இனி மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. தேவால்ட் பிரெவிஸ் 44 ரன்களும், கார்த்திக் சர்மா 32 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னையை கட்டுப்படுத்தினார். பின்னர் 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி, இஷான் கிஷனின் அதிரடி 70 ரன்கள் மற்றும் ஹென்றிச் கிளாசனின் 47 ரன்கள் உதவியுடன் 19 ஓவர்களிலேயே வெற்றியை எட்டியது.

சிஎஸ்கே பிளே-ஆப் செல்ல இன்னும் வாய்ப்பு உள்ளதா?
இந்தத் தோல்விக்குப் பிறகு சிஎஸ்கே அணி 13 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் தவிக்கிறது. லீக் சுற்றில் சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது. வரும் மே 21-ம் தேதி அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே விளையால உள்ளது. சிஎஸ்கே அணி பிளே-ஆப் செல்ல வேண்டுமானால் கீழ்வரும் கணக்குகள் சரியாக அமைய வேண்டும்:
குஜராத்துக்கு எதிராக வெற்றி: முதலில், குஜராத் அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் சிஎஸ்கே அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இதில் தோற்றால் சிஎஸ்கே அணி எவ்வித வாய்ப்புமின்றி உடனடியாகத் தொடரிலிருந்து வெளியேறும். எனவே, இந்தப் போட்டியில் வென்று 14 புள்ளிகளை எட்டுவதுடன், ரன் ரேட்டையும் கணிசமாக உயர்த்த வேண்டியது அவசியம்.
பஞ்சாப் கிங்ஸ் தோல்வி: தற்போது 13 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, மே 23-ம் தேதி நடைபெறும் தனது கடைசிப் போட்டியில் லக்னோ அணியிடம் தோற்க வேண்டும். பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் அவர்கள் 15 புள்ளிகளைப் பெற்று விடுவார்கள். இதனால் 14 புள்ளிகள் மட்டுமே பெறக்கூடிய சிஎஸ்கே அணிக்கு வாய்ப்பு பறிபோகும்.
ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா: 12 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளன. அவர்கள் இரண்டிலும் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் பிளே-ஆப் செல்வார்கள். எனவே, அவர்கள் ஒரு போட்டியிலாவது தோற்க வேண்டும். அதேபோல் 11 புள்ளிகளுடன் உள்ள கொல்கத்தா அணியும் ஒரு போட்டியில் தோற்க வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் 14 புள்ளிகளுக்கு மேல் செல்லாமல் இருக்க வேண்டும். அதே சமயம் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளும் 14 புள்ளிகளுக்கு மேல் பெறாமல் முடங்க வேண்டும். இந்தச் சூழலில் சிஎஸ்கே அணி குஜராத்தை வீழ்த்தி 14 புள்ளிகளுடன் இருந்தால், ரன் ரேட் அடிப்படையில் 4-வது இடத்தைப் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். இது மிகவும் கடினமானது என்பதால் சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் முடிவுக்கு வந்து விட்டதாகவே கருதலாம்.


Click it and Unblock the Notifications