IPL 2026: சிஎஸ்கே அணியால் பிளே-ஆப் செல்ல முடியும் ஆனால்.. தலைசுற்ற வைக்கும் புள்ளிப்பட்டியல் கணக்கு
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஒரு இக்கட்டான சூழலில் நிற்கிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் பிளே-ஆப் சுற்றுக்குத் செல்ல முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளே சிஎஸ்கே அணிக்கு மீதமுள்ள நிலையில் என்ன செய்தால் சிஎஸ்கே அணியால் பிளே ஆப் முன்னேற முடியும் என்று பார்க்கலாம்.
தற்போதைய நிலை என்ன?
புள்ளிப்பட்டியலைப் பொறுத்தவரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணி +0.027 என்ற மிகக் குறைந்த பிளஸ் மதிப்பில் உள்ளது. சிஎஸ்கே அணிக்கு இன்னும் 2 லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. இந்த இரண்டிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் 16 புள்ளிகளை எட்ட முடியும்.
முன்னால் இருக்கும் சவால்கள்
புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (16 புள்ளிகள்) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (16 புள்ளிகள்) ஏற்கனவே தங்களது இடத்தை ஓரளவுக்கு உறுதி செய்துவிட்டன. ஆர்சிபி அணியின் ரன் ரேட் +1.053 என அபாரமாக இருப்பதால், அவர்கள் பிளே-ஆப் செல்வது கிட்டத்தட்ட உறுதி. குஜராத் அணியும் 16 புள்ளிகளுடன் வலுவாக உள்ளது.
உண்மையான போட்டி 3, 4 மற்றும் 5-வது இடங்களில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையே தான் நிலவுகிறது.16 புள்ளிகளை எட்டும் அணிகள் பிளே ஆப் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் எந்தெந்த அணிகள் 16 புள்ளிகளை பெறும் என்று பார்க்கலாம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (14 புள்ளிகள்): ஹைதராபாத் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளன. அதில் ஒரு போட்டி சிஎஸ்கே அணிக்கு எதிரானது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே வென்றால், இரு அணிகளும் சமநிலைக்கு வரும். ஆனால் ஹைதராபாத் மீதமுள்ள ஒரு போட்டியில் வென்றால் 16 புள்ளிகளை எட்டிவிடும்.
பஞ்சாப் கிங்ஸ் (13 புள்ளிகள்): பஞ்சாப் அணி ஒரு போட்டி மழையால் ரத்தானதால் 13 புள்ளிகளுடன் உள்ளது. அவர்கள் மீதமுள்ள 2 போட்டிகளில் வென்றால் 17 புள்ளிகளுடன் எளிதாக பிளே-ஆப் சென்றுவிடுவார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் (12 புள்ளிகள்): ராஜஸ்தான் அணி சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஏனெனில் அவர்கள் 11 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர். அவர்களுக்கு இன்னும் 3 போட்டிகள் கைவசம் உள்ளன. அதில் 2-ல் வென்றாலே அவர்கள் 16 புள்ளிகளை எட்டிவிடுவார்கள்.
சிஎஸ்கே பிளே-ஆப் செல்ல என்ன நடக்க வேண்டும்?
சிஎஸ்கே அணி தனது அடுத்த 2 போட்டிகளில் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ்) கண்டிப்பாக வென்றே தீர வேண்டும். இதில் ஒன்றில் தோற்றால் கூட 14 புள்ளிகளுடன் சிஎஸ்கே வெளியேற நேரிடும். 16 புள்ளிகளைப் பெற்றால் மட்டும் போதாது, ராஜஸ்தான் ராயல்ஸ் தனது மீதமுள்ள 3 போட்டிகளில் 2-ல் தோற்க வேண்டும் அல்லது பஞ்சாப் கிங்ஸ் தனது கடைசி 2 போட்டிகளில் ஒன்றில் தோற்க வேண்டும்.
அப்படியே 16 புள்ளிகளுடன் அணிகள் சமநிலை வகித்தால், ரன் ரேட் தான் முடிவை அறிவிக்கும். தற்போதுள்ள நிலையில் ஆர்சிபி, குஜராத், பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் ஆகிய அனைத்து அணிகளும் சிஎஸ்கே-வை விடச் சிறந்த ரன் ரேட் வைத்துள்ளன. எனவே, சிஎஸ்கே அணி இனி வரும் 2 போட்டிகளையும் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி தனது விதியைத் தானே தீர்மானிக்கும் சக்தியை இழந்துவிட்டது. அவர்கள் வெற்றி பெற்றுவிட்டு, மற்ற அணிகளின் தோல்விக்காகக் காத்திருக்க வேண்டிய 'கால்குலேட்டர்' நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மே 18-ம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டி தான் சிஎஸ்கே அணியின் பிளே-ஆப் கனவு வாழுமா அல்லது வீழுமா என்பதைத் தீர்மானிக்கும் அக்னிப் பரீட்சையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
