சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய போது சுரேஷ் ரெய்னாவால் தனக்கு ஏற்பட்ட சிரமம் ஒன்றையும், அதிலிருந்து தோனி எப்படி தன்னை மீட்டார் என்பது குறித்தும் அஸ்வின் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். 2010 ஐபிஎல் தொடரில் இருந்து அஸ்வின், சிஎஸ்கே அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார்.
அப்போது தோனியின் கேப்டன்சியில் முதல் சில போட்டிகளில் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இடையே தோனிக்கு காயம் ஏற்பட்டதால், அவர் கேப்டன்சியை சுரேஷ் ரெய்னாவிடம் அளித்துவிட்டு ஓய்வில் இருந்தார். அந்த சில போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, சுரேஷ் ரெய்னா முக்கியத்துவம் அளிக்கவில்லை. அஸ்வினை தோனி பயன்படுத்திய விதமும், ரெய்னா பயன்படுத்திய விதமும் வேறு வேறாக இருந்தன.

ரெய்னா அஸ்வினை நம்பி பவர்பிளே ஓவர்களில் வாய்ப்பு அளிக்காததால் அவரது செயல்பாடு சரிவை சந்தித்தது. அதனால், அவர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். அணியில் இருந்து வெளியேற்றப்படும் நிலைக்கு சென்றார். தோனி அணிக்கு திரும்பியவுடன் அஸ்வினை அணியை விட்டு நீக்காமல் அவரை மீண்டும் தான் எப்படி பயன்படுத்தினாரோ, அதையே மீண்டும் செய்து அவருக்கு நம்பிக்கை அளித்து இருக்கிறார்.
இது குறித்து அஸ்வின் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். "2010 ஐபிஎல் தொடரில் ஒரு போட்டி எனக்கு நினைவில் உள்ளது. ஷேன் பான்ட் பந்துவீச்சில் தோனியின் கையில் காயம் ஏற்பட்டது. அதனால், அவர் அணியை விட்டு விலகினார் ஆனால் நான் அப்போது தான் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படத் தொடங்கி இருந்தேன். அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் நான் விளையாடுவேன் என்ற நிலை இருந்தது."
"அந்த சமயத்தில் தோனி காயம் காரணமாக வெளியேறினார். சுரேஷ் ரெய்னா அணியை வழிநடத்தினார். அவர்கள் இருவருக்கும் வீரர்களை எப்படி கையாள்வது என்பதில் வெவ்வேறு பார்வைகள் இருந்தன. தோனியின் தலைமையில் ஆடிய போது நான் பவர்பிளே ஓவர்களில் பந்து வீசினேன். ஆனால், ரெய்னா வந்தபின் நான் பவர் பிளேவில் பந்து வீசவில்லை. நான் சற்று தாமதமாகவே (கடைசி ஓவர்களில்) பந்து வீச அழைக்கப்பட்டேன். அப்போது முத்தையா முரளிதரனும் அணியில் இருந்தார்."
"நான் பெங்களூரில் நடந்த போட்டியில் கடைசி ஓவரின் போது பந்து வீச அழைக்கப்பட்டேன். அது எனக்கு சரியாக அமையவில்லை. அதிக ரன்களை விட்டுக் கொடுத்தேன். மூன்று முறை அணியை நான் மோசமான நிலைக்கு கொண்டு சென்றேன். அதன் பின் தோனி மீண்டும் அணிக்கு திரும்பினார். அவர் வந்தவுடன் நான் ஏன் சரியாக செயல்படவில்லை என்ற புதிரை கண்டுபிடித்தார். அவர் மீண்டும் என்னை பவர்பிளே ஓவர்களில் பந்து வீச வைத்தார். நான் பவர் பிளே ஓவரில் மீண்டும் பந்து வீசி ஆடம் கில்கிறிஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினேன்."
"அதன் பின் பல ஆண்டுகளுக்கு அவர் என்னை அதே இடத்திலேயே பந்து வீச வைத்தார். அவர் என்னை எப்போதும் பவர்பிளே ஓவரில் தான் பந்து வீச அழைப்பார். இந்திய அணிக்காக ஆடிய போதும் அப்படித்தான் செய்தார். எனவே, அவரது நம்பிக்கை என்பது அசாத்தியமானதாக இருக்கும். மேலும், அவர் என்னிடம் என்ன செய்ய வேண்டும் என கூறும் போது மிகவும் எளிமையாக அதை சொல்வார்" என்றார் அஸ்வின்.