“வலியில் துடித்த இளம் சிஎஸ்கே வீரரை ரன் ஓட சொல்வதா?” அஸ்வின் ஆவேசம்.. சிஎஸ்கே அணிக்கு நெருக்கடி
சென்னை: சிஎஸ்கே அணியின் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மத்ரே வலியால் துடித்தபோதும், அணி நிர்வாகம் அவரை நடத்திய விதம் வர்ணனையாளர்களை உறைய வைத்தது. இந்த பொறுப்பற்ற செயலுக்காக சிஎஸ்கே நிர்வாகத்தை அஸ்வின் கடுமையாக வெளுத்து வாங்கியுள்ளார். சிஎஸ்கே நிர்வாகத்தின் மருத்துவ குழு மற்றும் வீரர்களின் உடற்தகுதி பராமரிப்பு குறித்து சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார் அஸ்வின்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 18 வயதான இளம் வீரர் ஆயுஷ் மத்ரே முழங்காலில் கட்டுடன் தான் பேட்டிங் செய்ய வந்தார். கடந்த 2, 3 போட்டிகளாகவே அவர் மாற்று வீரராக மட்டுமே களமிறக்கப்படுகிறார். இந்த நிலையில், பேட்டிங் செய்யும்போது அவருக்கு காலில் பலமான தசைப்பிடிப்பு ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்டு மைதானத்தில் விந்தியபடியே நின்ற அவரை உடனடியாக வெளியேற்றாமல், தொடர்ந்து பேட்டிங் செய்ய அனுமதித்தது சிஎஸ்கே நிர்வாகம்.

அதுமட்டுமின்றி, கேப்டன் ருதுராஜ் அவருடன் இணைந்து ரன் ஓட அழைத்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வலியால் துடித்தபடி ஓடிய அவர் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இது குறித்து பேசிய அஸ்வின், "ஒரு வீரர் நடக்கவே முடியாமல் மைதானத்தில் தவிக்கும் போது, மருத்துவ குழு வந்து பரிசோதித்த பிறகும் அவரை மீண்டும் விளையாடச் சொல்வதோடு, விக்கெட்டுகளுக்கு இடையே ஓடச் சொல்வது என்ன நியாயம்?"
"அவரை ஏன் உடனடியாக வெளியேற்றவில்லை? இதனைப் பார்த்த வர்ணனையாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ஆயுஷ் மத்ரே இந்த சீசனின் மிகச் சிறந்த வீரராக உருவெடுத்து வருகிறார். அவரை இப்படி கவனக்குறைவாக கையாண்டது எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது" என்றார் அஸ்வின்.
மேலும் பேசிய அவர், "சிஎஸ்கே அணியில் ஒவ்வொரு சீசனிலும் வீரர்கள் இப்படி காயத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. தீபக் சாஹர் சிஎஸ்கே அணிக்காக 3 ஆண்டுகளில் வெறும் 16 போட்டிகளில் மட்டுமே ஆடினார். ஆனால் மும்பை அணிக்காக 14 போட்டிகளில் தொடர்ந்து விளையாடினார். காயம் என்பது சீசன் தொடங்குவதற்கு முன்பே கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்று."
"ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எனக்கு முழங்கால் காயம் ஏற்பட்டபோது வருடம் முழுவதும் என்னை கண்காணித்தது. தசைப்பிடிப்பு காயங்களை எளிதாக தவிர்க்க முடியும். ஒவ்வொரு வருடமும் வீரர்கள் காயமடைந்தால், புதிய வீரர்களை என்ன சந்தையிலா வாங்க முடியும்?" என அஸ்வின் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். அஸ்வினின் இந்த கடுமையான விமர்சனம் சிஎஸ்கே நிர்வாகத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications