சென்னை: 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து, மிக மோசமான சீசனைச் சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு சில கடினமான முடிவுகளை எடுக்கத் தயாராகி வருகிறது. கடந்த சீசனில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்ற சிஎஸ்கே, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக பாதியிலேயே விலகியதால் பெரும்பாலான போட்டிகளில் அனுபவ வீரர் எம்.எஸ். தோனியின் தலைமையின் கீழ் விளையாடியது.
இந்த நிலையில் 2026 ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி பல்வேறு பணிகளை செய்யத் துவங்கி விட்டது. சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வந்து, அணியின் தூணாக இருந்த ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அனுப்பும் அணிப் பரிமாற்றத்திற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்தச் சூழலில், அணியின் நிதிச்சுமையைக் குறைத்து, புதிய வீரர்களை ஏலத்தில் எடுக்க வசதியாக, கீழ்க்கண்ட 5 வீரர்களை சிஎஸ்கே நிர்வாகம் அணியில் இருந்து விடுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற சீசனில் முக்கியப் பங்காற்றிய நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே, தற்போது அணியிலிருந்து வெளியேறும் விளிம்பில் உள்ளார். 2025 சீசனில், பல தொடக்க ஜோடிகளை சிஎஸ்கே முயற்சி செய்ததால், கான்வே பெரும்பாலான போட்டிகளில் பெஞ்சிலேயே அமரவைக்கப்பட்டார்.
தற்போது சஞ்சு சாம்சனின் வருகை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், ₹6.25 கோடிக்கு வாங்கப்பட்ட கான்வே விடுவிக்கப்படுவது நிச்சயம் எனத் தெரிகிறது. கடந்த சீசனில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், 131.09 ஸ்ட்ரைக் ரேட்டில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
2025 ஐபிஎல் ஏலத்தில் ₹3.4 கோடிக்கு வாங்கப்பட்ட ராகுல் திரிபாதி, சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தார். 5 இன்னிங்ஸ்களில் வெறும் 55 ரன்களை மட்டுமே எடுத்தார், அதுவும் 96.49 என்ற மந்தமான ஸ்ட்ரைக் ரேட்டில். அடுத்த சீசனில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் திரும்பும் நிலையில், கடந்த சீசனின் தோல்விக்கு முக்கியக் காரணமாக இருந்த டாப்-ஆர்டர் பேட்டிங்கைச் சரிசெய்ய, திரிபாதியை விடுவித்து அந்தப் பணத்தை ஏலத்தில் புதிய திறமைகளை வாங்க சிஎஸ்கே பயன்படுத்தும்.
சிஎஸ்கே-வின் மற்றொரு படுமோசமான தேர்வாக தீபக் ஹூடா அமைந்தார். ₹1.7 கோடிக்கு வாங்கப்பட்ட இவர், 5 இன்னிங்ஸ்களில் 75.60 என்ற மிக மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஃபினிஷர் ரோலில் களமிறக்கப்பட்ட இவரது அதிகபட்ச ஸ்கோரான 22 ரன்களை எடுக்க, அவர் 21 பந்துகளை எடுத்துக்கொண்டார். இது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தற்போது ரஞ்சி டிராபியில் ராஜஸ்தான் அணிக்காக இரட்டைச் சதம் மற்றும் சதம் அடித்து நல்ல ஃபார்மில் இருந்தாலும், ஐபிஎல்-ல் சொதப்பியதால் அவரை சிஎஸ்கே தக்கவைக்க வாய்ப்பில்லை.
மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க நினைக்கும் சிஎஸ்கே, விஜய் சங்கர் போன்ற வீரர்களுக்குப் பதிலாக புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க நினைக்கும். 2025 ஐபிஎல் ஏலத்தில் ₹30 லட்சம் அடிப்படை விலையில் ஏலத்திற்கு வந்த இவரை, ₹1.2 கோடி கொடுத்து சிஎஸ்கே வாங்கியது. ஆனால், பந்துவீச்சில் இவரைப் பயன்படுத்தவே இல்லை. பேட்டிங்கில் 118 ரன்களை 129.67 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார். இந்த புள்ளிவிவரங்கள், அவரை அணியில் தக்கவைக்கப் போதுமானதாக இருக்காது என்றே கருதப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டியிருந்ததால், ஐபிஎல் 2025 தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறினார் ஜேமி ஓவர்டன். அதற்கு முன்பும் பெரும்பாலான போட்டிகளில் அவர் பெஞ்சிலேயே அமர்ந்திருந்தார். ₹1.5 கோடிக்கு வாங்கப்பட்ட இந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர், 3 போட்டிகளில் 6 ஓவர்கள் வீசி, ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 83 ரன்களை வாரி வழங்கினார். இவருக்குப் பதிலாக, இந்திய ஆடுகளங்களில் சிறப்பாகச் செயல்படக்கூடிய நிரூபிக்கப்பட்ட வீரரை வாங்கவே சிஎஸ்கே விரும்பும்.