சென்னை:ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில், சென்னையும், டெல்லியும் பரஸ்பரம் பதிவிட்டுக் கொண்ட டுவீட்டுகள் இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.
2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், மார்ச் இறுதியில் இனிதே தொடங்கி, சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நடைபெற்றது.

அதில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னையை ஒரு ரன்னில் வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்றது. முன்னதாக இந்த தொடரில் சென்னை அணியின் ஸ்டார் வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் தாஹிர் தமிழில் ட்வீட்களை வெளியிட்டு வந்தனர்.
மற்ற அணிகள் எல்லாம் ஆங்கிலத்தில டுவீட்டிக் கொண்டிருந்தன. இப்போது அதில் ஒரு மாற்றமாக டெல்லி அணி தமிழில் டுவிட் பதிவை வெளியிட்டு இருக்கிறது. அந்த பதிவை தமது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது: #Yellove மற்றும் நல்ல கரகோஷத்துடன் நமது மோதல்கள் அனைத்துமே சிறந்த அனுபுவமாக இருந்தது என்று கூறி உள்ளது. இந்த வைரல் தமிழ் ட்வீட் அனைவராலும் பகிரப்பட்டதை அடுத்து, அதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பதில் பதிவிட்டுள்ளது.
அதன்படி, 'மிக்க நன்றி! அந்த நாள் (2012) ஞாபகம் நெஞ்சிலே வந்தது! உங்களின் மிகப்பெரிய வெற்றி அனைவரின் மனதிலும் இடம் பிடித்தது தான்! வாழ்த்துகள்!' என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து டெல்லி அதிகாரப்பூர்வ அணிக்கு பதிலிட்டுள்ளது. இந்த ட்வீட்கள் இணையத்தில் பரவி, ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.