மும்பை: சிஎஸ்கே அணியில் இருந்து சாம் கரண் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், ரச்சின் ரவீந்திரா ரீடெய்ன் செய்யப்பட இருப்பது அந்த அணியின் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி ருக்கிறது. இதற்கு பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்கின் நியூசிலாந்து பாசமே காரணம் என்றும் ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 2வது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 13 முதல் டிசம்பர் 15 வரை 2 நாட்கள் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மினி ஏலத்திற்கு ஒரு மாதம் முன்பாகவே ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் 10 அணிகளும் தங்களின் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.

அதன்படி சிஎஸ்கே அணி தரப்பில் கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் ஹூடா, விஜய் சங்கர், ராகுல் திரிப்பாட்டி, சாம் கரண் மற்றும் டெவோன் கான்வே ஆகிய 5 வீரர்களையும் விடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் தீபக் ஹூடா, விஜய் சங்கர் மற்றும் ராகுல் திரிப்பாட்டி ஆகியோரை விடுவிப்பதில் சிஎஸ்கே அணிக்கு எந்த சிக்கலும் இல்லை.
அதேபோல் கான்வேயும் ஃபார்மின்றி தவித்து வருவதோடு, கடந்த சீசனில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டார். இதனால் கான்வேவை மீண்டும் சிஎஸ்கே அணி குறைந்த விலைக்கு வாங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஆனால் சாம் கரண் என்ன காரணத்திற்காக விடுவிக்கப்படுகிறார் என்பதே ரசிகர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.
ஏனென்றால் கடந்த சீசனில் சாம் கரண் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவரை விடவும் ரச்சின் ரவீந்திர மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிஎஸ்கே அணிக்காக ரச்சின் ரவீந்திரா பெரியளவில் எந்த இன்னிங்ஸையும் விளையாடியதும் இல்லை. இதனால் ரச்சின் ரவீந்திராவை ரீடெய்ன் செய்துவிட்டு, சாம் கரணை வெளியேற்ற முடிவு செய்திருப்பது விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதற்கு சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்கின் நியூசிலாந்து பாசமே காரணம் என்றும் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். ஏற்கனவே அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், சிஎஸ்கே அணி சுமார் ரூ.20 கோடியுடன் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.