சென்னை: கேகேஆர் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸலை சிஎஸ்கே அணி வாங்க வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. சுமார் 13 ஆண்டுகளாக கேகேஆர் அணிக்காக விளையாடி வரும் ரஸ்ஸல், திடீரென விலகியதற்கும், சிஎஸ்கே அணியின் அனலிஸ்ட் ஸ்ரீகாந்திற்கு இருக்கும் நட்பே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
சிஎஸ்கே அணி ரிலீஸ் செய்த வீரர்களின் பட்டியல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வரும் கான்வே, ரச்சின் ரவீந்திரா, பதிரானா என்று நட்சத்திர வீரர்கள் பலரும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ரூ.18 கோடிக்கு டிரேட் செய்து சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது.

சிஎஸ்கே அணியின் வரலாற்றில் எப்போதும் எந்த வீரரையும் வேறொரு அணிக்கு தாரை வார்த்ததே இல்லை. முதல்முறையாக ஜடேஜா மற்றும் சாம் கரணை சிஎஸ்கே அணி விட்டுக் கொடுத்திருக்கிறது. இதற்கு சிஎஸ்கே அணியின் அனலிஸ்ட்டான ஏஆர் ஸ்ரீகாந்த் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் டிவால்ட் பிரெவிஸ், உர்வில் படேல் ஆகியோரை தேர்வு செய்ததில் ஸ்ரீகாந்த் பங்கு உள்ளது.
இந்த முறை தோனியின் ஆதரவும் ஸ்ரீகாந்திற்கு இருந்திருக்கிறது. இதன் காரணமாகவே ஸ்ரீகாந்த் வார்த்தையை ஏற்று பதிரானா போன்ற வீரர்களையும் கூட சிஎஸ்கே அணி விடுவித்துள்ளது. மறுபக்கம் கேகேஆர் அணிக்காக 13 ஆண்டுகளாக விளையாடி வரும் ரஸ்ஸல் திடீரென அந்த அணியில் இருந்து தன்னை விடுவிக்க கோரி இருக்கிறார்.
இதற்கும் ஸ்ரீகாந்த் - ரஸ்ஸல் இடையிலான நட்பே காரணமாக கூறப்படுகிறது. இதனால் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடக்கவுள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி ரஸ்ஸல்லை வாங்க கட்டாயம் முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியின் ஃபினிஷர் ரோலுக்கு ஒரு அதிரடி ஆல்ரவுண்டர் தேவையாக இருக்கிறார்.
ஜேமி ஓவர்டன் இருந்தாலும், ரஸ்ஸல் இருந்தாலும் சேப்பாக்கம் மண்ணில் கூடுதல் வலிமையாக இருக்கும். இதனால் ரஸ்ஸல் தனது கடைசி ஐபிஎல் வாழ்க்கையை சிஎஸ்கே அணியுடன் நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப ஏஆர் ஸ்ரீகாந்தும் இன்ஸ்டாகிராமில் மறைமுகமாக சில பதிவுகளை போட்டு வருவது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.