சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான்கள் 'ROAR 2026' நிகழ்ச்சிக்காக ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கத்தில் ஒன்று திரண்டனர். ஐந்து முறை சாம்பியன்கள் தங்கள் ஐபிஎல் சீசனுக்கு முன்னதான இந்த பிரமாண்ட நிகழ்வை, ரசிகர்கள் நிரம்பிய மைதானத்தில் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹேடன், முத்தையா முரளிதரன், ஷதாப் ஜகாதி, ஜோகிந்தர் ஷர்மா, ஹர்பஜன் சிங், எல். பாலாஜி, முரளி விஜய், எஸ். பத்ரிநாத், பார்த்திவ் படேல், அம்பாதி ராயுடு, டிவைன் பிராவோ உட்பட பல முக்கிய வீரர்கள் கலந்துகொண்டனர்.

ஆனால் ரசிகர்கள், ரவிச்சந்திரன் அஷ்வின் இல்லாததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். ஓய்வுக்கு முன்னதாக சிஎஸ்கே அணிக்காகவே கடைசியாக விளையாடிய அஷ்வின், 8 சீசன்களில் 106 போட்டிகளில் 97 விக்கெட்டுகளை எடுத்தவர்.

அஷ்வின் இல்லாதது சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுந்தன. "ஏன் அஷ்வின் சிஎஸ்கேயின் இந்த OG நிகழ்வில் இடம்பெறவில்லை?" என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக, அஸ்வின் சில கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். இது சிஎஸ்கேக்கு பிரச்சினையை ஏற்படுத்தியது. குறிப்பாக தென்னாப்பிரிக்க வீரர் பிரவீஸ்க்கு சிஎஸ்கே சொன்னதை விட அதிக பணம் கொடுத்ததாக கூறி இருந்தார். இது சிஎஸ்கேக்கு பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில், அணி நிர்வாகம் உடனடியாக மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.
இதே போன்று மினி ஏலத்திற்கு முன்பு சிஎஸ்கே யாரை வாங்கப் போகிறது என்ற தகவலையும் கசிய விட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சிஎஸ்கே அணியை தடுக்கும் விதமாக பல அணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து ஏலத்தில் சந்தித்தது. அப்போதும் அஸ்வின் தாம் எந்த ஒரு தகவலையும் கசிய விடவில்லை என்று விளக்கம் அளித்தார். இதனால் தான் அஸ்வினை சிஎஸ்கே புறக்கணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், 2026 ஐபிஎல் சீசனை மார்ச் 30 அன்று குவஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக தொடங்குகிறது. இது அவர்களுக்கு ஒரு சவாலான தொடக்கமாக அமையும்.ராஜஸ்தானுக்கு எதிரான மோதலைத் தொடர்ந்து, சிஎஸ்கே ஏப்ரல் 3 அன்று பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியையும், ஏப்ரல் 5 அன்று நடப்பு சாம்பியன்களான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியையும் ஏப்ரல் 11 அன்று டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியையும் எதிர்கொள்கிறது.

சிஎஸ்கேயின் நம்பிக்கை நட்சத்திரம் எம்.எஸ். தோனி மீண்டும் ஐபிஎல்லில் கலந்துகொள்கிறார். மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டரான இதுவே அவருக்கு கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் எனப் பலரும் யூகிக்கின்றனர்.44 வயதான தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி, மணீஷ் பாண்டேவுடன் சேர்ந்து அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் விளையாடிய நான்கு செயலில் உள்ள வீரர்களில் ஒருவர். 278 போட்டிகளில் 5,439 ரன்கள், 38 சராசரி, 137 ஸ்ட்ரைக் ரேட்டுடன், லீக் வரலாற்றில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.