சென்னை: 2026 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ரசிகர்களுக்காக ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்ட நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரோர் 26 (Roar 26) என பெயரிடப்பட்டுள்ள இந்த மாபெரும் திருவிழா, வருகிற மார்ச் 22 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மானின் சிறப்பு நேரடி இசைக்கச்சேரி நடைபெற உள்ளது. இசை, வண்ண விளக்குகள் மற்றும் ரசிகர்களுக்கான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் சேப்பாக்கம் மைதானம் ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்ட களமாக மாறவுள்ளது. இது பல ஆண்டுகளாக அணிக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு ஒரு சமர்ப்பணமாக அமையும் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மாபெரும் நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான தற்போதைய சிஎஸ்கே அணியினருக்கும், முன்னாள் சிஎஸ்கே நட்சத்திரங்களுக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான கண்காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. சிஎஸ்கே அணியின் முன்னாள் ஜாம்பவான்களான சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹைடன், முரளி விஜய் மற்றும் சுப்ரமணியம் பத்ரிநாத் ஆகியோர் மீண்டும் மஞ்சள் நிற ஜெர்சியில் களமிறங்கி தற்போதைய இளம் அணியை எதிர்கொள்ள உள்ளனர்.
இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 15 முதல் சிஎஸ்கே செயலி, அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் டிஸ்ட்ரிக்ட் செயலியில் தொடங்குகிறது. இதற்கிடையே, 6வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள சிஎஸ்கே அணிக்கு, இது தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் இந்த சீசனின் பெரும்பாலான போட்டிகளில் விளையாடுவார். சமீபத்தில் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ள நிலையில், இந்த சீசனின் முடிவில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டிங் பொறுப்பை தோனி அவரிடம் முழுமையாக வழங்குவார் என நம்பப்படுகிறது. ஐபிஎல் திருவிழா தொடங்குவதற்கு முன்பே சிஎஸ்கே நடத்தும் இந்த கச்சேரி ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.