மும்பை: "இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் மிக முக்கியமான தருணங்களில் ருதுராஜ் கெய்க்வாட் தனது ஃபார்மை இழந்துவிடுகிறார். இதனால்தான் அவரால் அணியில் நிரந்தர இடம்பிடிக்க முடியவில்லை," என்று முன்னாள் இந்திய வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்திருந்தும், நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் சேர்க்கப்படாதது குறித்து உத்தப்பா தனது யூடியூப் சேனலில் இவ்வாறு பேசியுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்துப் பேசிய ராபின் உத்தப்பா -
"ருதுராஜ் கெய்க்வாட் விஷயத்தில் நான் ஒன்றை கவனித்தேன். அவருக்கு எப்போதெல்லாம் மிகச்சிறந்த வாய்ப்பு வருகிறதோ, அந்தச் சரியான நேரத்தில் அவர் தனது ஃபார்மை இழந்துவிடுகிறார். இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, வாய்ப்பு கிடைக்கும்போதே அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ரன் குவிக்க வேண்டும். ருதுராஜுக்கு இரண்டு, மூன்று முறை வாய்ப்புகள் வந்தன. ஆனால், அந்த நேரத்தில்தான் அவர் சறுக்கலைச் சந்தித்தார்" என்றார் ராபின் உத்தப்பா.

ருதுராஜ் கெய்க்வாட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தனது முதல் ஒருநாள் சதத்தைப் பதிவு செய்திருந்தாலும், அவரது ஒட்டுமொத்தப் புள்ளிவிவரங்கள் சற்று கவலை அளிப்பதாகவே உள்ளன. அவர் இதுவரை விளையாடிய சர்வதேச ஒருநாள் போட்டிகள் 9 மட்டுமே. அதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு சதம் அடித்தார்.
அந்த ஒரு சதத்தைத் தவிர்த்துப் பார்த்தால், மீதமுள்ள 8 போட்டிகளில் வெறும் இரண்டு முறை மட்டுமே அவர் இரட்டை இலக்க ரன்களை எட்டியுள்ளார். இந்தச் சீரற்ற ஆட்டத்திறன் காரணமாகவே, தேர்வுக்குழுவினர் அவர் மீது முழு நம்பிக்கை வைக்கத் தயங்குவதாக உத்தப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.
காயம் காரணமாக விலகியிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது முழுமையாகக் குணமடைந்து ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளார். இந்திய அணியின் 4-வது வரிசையில் அவர் ஒரு முக்கிய வீரராகக் கருதப்படுவதால், அவர் வந்தவுடன் ருதுராஜ் வெளியேற வேண்டிய சூழல் உருவானது.
நியூசிலாந்து தொடருக்கு பின் அடுத்த ஒருநாள் தொடர் ஜூலை 2026-ல் தான் நடைபெறவுள்ளது. அதுவரை விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் ருதுராஜ் தனது ஃபார்மைத் தொடர்ந்து நிரூபித்தால் மட்டுமே மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய முடியும்.