சென்னை: இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்விக்கு, ஜாம்பவான் எம்.எஸ். தோனி அல்லது தற்போதைய இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பெயர்களைத்தான் பலரும் கூறுவார்கள். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், வேறு ஒரு பெயரை சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தற்போது தமிழ்நாட்டில் புச்சி பாபு அழைப்பு கிரிக்கெட் தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட், சமீபத்தில் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் சிறுவர், சிறுமிகளுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவரிடம் குழந்தைகள் பல சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பினர்.

அதில் ஒரு சிறுவன், "இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் யார்?" என்று கேட்டபோது, ஒரு நொடியும் யோசிக்காத ருதுராஜ், தன்னைத் தானே சுட்டிக்காட்டி, "என் கீப்பிங்கை நீங்கள் பார்த்ததில்லையா? யூடியூபில் போய் பாருங்கள். சோயிப் அக்தர் பவுலிங்கை பார்ப்பதற்குப் பதிலாக, என் கீப்பிங்கை பாருங்கள்" என்று கலகலப்பாக பதிலளித்தார்.
தோனி மற்றும் ரிஷப் பண்ட் போன்ற ஜாம்பவான்கள் இருக்கும்போது, ருதுராஜின் இந்த வேடிக்கையான பதில் அங்கிருந்த அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது. கலந்துரையாடல் தொடர்ந்தபோது, "நீங்கள் எதிர்கொண்டதிலேயே மிகவும் கடினமான பந்துவீச்சாளர் யார்?" என்ற கேள்விக்கு, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட்டின் பெயரை ருதுராஜ் குறிப்பிட்டார்.
மேலும், குழந்தைகளுடன் ஐபிஎல் அணிகள் குறித்து அவர் பேசியது இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. "உங்களுக்கு எந்த ஐபிஎல் அணி பிடிக்கும்?" என்று ருதுராஜ் கேட்க, குழந்தைகள் அனைவரும் "சிஎஸ்கே, சிஎஸ்கே!" என்று கோஷமிட்டனர். ஆனால், "வேறு எந்த அணிகளைப் பிடிக்கும்?" என்று அவர் மீண்டும் கேட்டபோது, சில குழந்தைகள் ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் பெயரைக் கூறினர்.
இதைக் கேட்டவுடன் விளையாட்டுத்தனமாக, "அவுட், அவுட்! வேறு அணிகளுக்கு ஆதரவளிப்பவர்கள் எல்லாம் கையைத் தூக்குங்கள். உங்கள் பெயரையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு, உங்களை சிஎஸ்கே அணிக்கு எடுக்க மாட்டோம்" என்று கூறி அரங்கை அதிர வைத்தார்.
புச்சி பாபு தொடரில் சத்தீஸ்கர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ருதுராஜ் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் 1 ரன்னிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும், களத்திற்கு வெளியே குழந்தைகளுடன் அவர் இந்த ஜாலியான உரையாடலை நிகழ்த்தினார்.