சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 2025 ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பதவி ஏற்க இருக்கிறார். இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஏற்பட்டுள்ள காயம் உண்மை இல்லை என சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வலம் வருகிறது.
அதை ஆதாரமாக காட்டி ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள். வேண்டுமென்றே ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டதாக கூறி அவரை நீக்கிவிட்டு தோனியை கேப்டனாக்க வேண்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இதுபோல செய்துள்ளது என அவர்கள் விமர்சித்து வருகிறார்கள். அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.

ருதுராஜுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதுவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு இரண்டு போட்டிகளில் அவர் விளையாடினார். அந்த இரண்டு போட்டிகளிலும் அவர் சரியாக ரன் சேர்க்கவில்லை. அவருக்கு தற்போது முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்தார்.
அப்படி முழங்கையில் எலும்பு முறிவு இருக்கும்போது அவர் இன்று சென்னை சேப்பாக்கத்தில் சக வீரர்களுடன் கால்பந்து விளையாடினார். கையில் தானே காயம் ஏற்பட்டிருக்கிறது கால்பந்து விளையாடினால் என்ன என்று நினைத்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் அந்த கால்பந்தை எடுத்து இரண்டு கைகளிலும் மாற்றி, மாற்றி சுழற்றினார்.
முழங்கையை ருதுராஜ் கெய்க்வாட் மிக எளிதாக வளைத்து நீட்டி அனைத்து வேலைகளையும் செய்தார். முழங்கையில் காயம் ஏற்பட்டு இருந்தாலும் விரிசல் ஏற்பட்டிருந்தாலோ அவர் இந்த அளவுக்கு எவ்வித கவனமும் இன்றி கைகளை அசைப்பாரா? பந்தை எடுத்து கையில் சுழற்றுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முழங்கையில் ஏற்படும் காயம் என்பது சரியாவதற்கு நீண்ட நாட்கள் ஆகும். மேலும், கையை மடக்கினால் அதிக வலியை தரும். ஆனால் எவ்வித வலி உணர்வும் இன்றி ருதுராஜ் மிக சாவகாசமாக கால்பந்தை கையில் எடுத்து சுழற்றி சாகசம் செய்தது எப்படி? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அப்படி என்றால் அவருக்கு உண்மையிலேயே காயம் இல்லை. அவர் தோனியை கேப்டனாக்க வேண்டி அவருக்கு காயம் இருப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் சொல்லி இருக்கிறது என ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள். நேரலை ஒளிபரப்பின் போது இந்த வீடியோ காட்சி ஒளிபரப்பானது. அப்போது முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, "எப்படி முழங்கை விரிசலுடன் ருதுராஜ் பந்தை கையாள்கிறார்? இது எனக்கு புரியவில்லை" என்று தனது சந்தேகத்தை முன் வைத்தார்.
எனினும், ருதுராஜ் கெய்க்வாட்டின் முழங்கை காயம் எத்தகையது, அவரால் பேட்டிங் செய்ய முடியாது எனும் நிலையில் மற்ற வேலைகளை செய்ய முடியுமா? என்பது குறித்து தெளிவான மருத்துவ விளக்கம் ஏதும் இல்லை. ரசிகர்கள் தங்கள் சந்தேகத்தை இவ்வாறு குற்றச்சாட்டாக முன்வைத்து வருகிறார்கள்.