சண்டிகர்: ரஞ்சி டிராபி தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் ஹாட்ரிக் அரைசதம் விளாஅசி அசத்தியுள்ளார். இந்த அரைசதம் மூலமாக முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை விளாசி புதிய பெருமையையும் பெற்றுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் கன்சிஸ்டன்சியுடன் விளையாடி வருவது ரசிகர்களிடையே விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் போது காயம் காரணமாக விலகிய சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரஞ்சி டிராபி தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே புச்சி பாபு மற்றும் துலீப் டிராபி ஆகிய தொடர்களில் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி தனது ஃபார்மை ரசிகர்கள் முன்னிலையில் நிரூபித்து காட்டி இருந்தார்.

இதன்பின் ரஞ்சி டிராபி தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக மிடில் ஆர்டரில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார். கேரளா அணிக்கு எதிரான முதல் போட்டியில் மகாராஷ்டிரா அணி 18 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, தனியாளாக போராடி ருதுராஜ் கெய்க்வாட் 91 ரன்களை விளாசி தள்ளினார். தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் அரைசதம் அடித்து கடைசி வரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்றார்.
இந்த நிலையில் சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் மகாராஷ்டிரா அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் மகாராஷ்டிரா அணி 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, நம்பர் 4 பேட்ஸ்மேனாக வந்த ருதுராஜ் கெய்க்வாட் எந்தவித பதற்றமும் இல்லாமல் நிதானமாக ரன்களை சேர்த்தார். அதிகளவில் ஆஃப் சைடிலேயே பவுண்டரிகளை விளாசினார்.
சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 82 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட அரைசதத்தை எட்டினார். இதன் மூலமாக ஹாட்ரிக் அரைசதத்தை ருதுராஜ் கெய்க்வாட் பதிவு செய்துள்ளார். அதேபோல் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களையும் கடந்து ருதுராஜ் கெய்க்வாட் அசத்தி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ரஞ்சி டிராபி தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டின் கன்சிஸ்டன்சி பலரையும் வியக்க வைத்துள்ளது. ஏனென்றால் கடந்த 10 ரஞ்சி போட்டிகளில் மட்டும் ஒரு சதம், 6 அரைசதங்களை ருதுராஜ் கெய்க்வாட் விளாசி உள்ளார். இதனால் விரைவில் இந்திய டெஸ்ட் அல்லது ஒருநாள் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.