சென்னை: 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களைத் தக்கவைக்கும், எந்த வீரர்களை விடுவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, அதன் வரலாற்றிலேயே முதன்முறையாக 2025-ஆம் ஆண்டு தொடரில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்ததால், அணியில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்ற பேச்சு சமூக வலைதளங்களில் பரவி வந்தன.
இந்த நிலையில், சாம் கரன், டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி உள்ளிட்ட முக்கிய வீரர்களைச் சிஎஸ்கே அணி விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு, அந்த அணி நிர்வாகம் தனது ட்விட்டர் (X) பக்கத்தின் மூலம் சூசகமாகவும், உறுதியாகவும் பதிலளித்துள்ளது.

பிரபல கிரிக்கெட் இணையதளமான 'கிரிக்பஸ்' வெளியிட்ட செய்தியில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி, அதன் முக்கிய வீரர்களான சாம் கரன், டெவோன் கான்வே, தீபக் ஹூடா, விஜய் சங்கர் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோரை மினி ஏலத்திற்கு முன்பாக விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
2025-ஆம் ஆண்டு தொடரில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் வெறும் 4-ல் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்ததால், இந்தச் செய்தி உண்மையாக இருக்கும் என பலரும் கருதினர். இதனால், சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பமும், விவாதங்களும் எழுந்தன. பலரும் இவர்களை நீக்கலாம் என்றனர். அதே சமயம் சாம் கரனை நீக்கக் கூடாது எனவும் பலரும் வாதிட்டனர்.
சமூக வலைதளங்களில் இந்த வதந்திகள் தீவிரமாகப் பரவி வந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தது. இது தொடர்பாக எந்தவித நீண்ட விளக்க அறிக்கைகளையும் வெளியிடாமல், மிகவும் எளிமையாகவும், அழுத்தமாகவும் தனது ட்விட்டர் (X) பக்கத்தின் 'பயோ'-வை (Bio) மாற்றியுள்ளது.
முதலில், "கவலை வேண்டாம், நாங்கள் பயோவை அப்டேட் செய்துவிட்டோம்" என்று ஒரு பதிவை வெளியிட்ட சிஎஸ்கே, பின்னர் தனது புதிய பயோவில், "Nothing's official till you see it here." ("இங்கே (சிஎஸ்கே அதிகாரப்பூர்வ பக்கத்தில்) பார்க்கும் வரை எதுவும் அதிகாரப்பூர்வமானது அல்ல") என்று மாற்றியது.
இதன் மூலம், சமூக வலைதளங்களில் பரவும் எந்தவிதமான வதந்திகளையும் ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்றும், வீரர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் மட்டுமே வெளியிடப்படும் என்றும் சிஎஸ்கே அணி நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சிஎஸ்கே-வின் சோதனைக் காலம்
2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கு ஒரு சோகமான அத்தியாயமாக அமைந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாகத் தொடரின் பாதியிலேயே விலகினார். அவருக்குப் பதிலாக எம்.எஸ். தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றபோதும், அணியின் தோல்விகளைத் தடுக்க முடியவில்லை. மேலும், தோனி இரண்டு போட்டிகளில் 9-வது வீரராகக் களமிறங்கியது பெரும் விவாதப் பொருளானது.
2026 ஐபிஎல் மினி ஏலம், டிசம்பர் 13 முதல் 15 வரை இந்தியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் இறுதிப் பட்டியலை நவம்பர் 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு பெற்றதால், சிஎஸ்கே அணியின் ஏல நிதி ரூ.9.75 கோடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சஞ்சு சாம்சன், மிட்செல் ஸ்டார்க், டி. நடராஜன், மயங்க் யாதவ், வெங்கடேஷ் ஐயர் மற்றும் கேமரூன் கிரீன் போன்ற பல முக்கிய வீரர்கள் ஏலத்திற்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், இந்த மினி ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.