CSK: வான்கடேவில் இவ்வளவு மஞ்சள் நிறத்தை பார்த்ததே இல்லை.. விக்கெட் இருந்திருந்தால்.. சாம்சன் பேச்சு
மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணி வரலாற்று வெற்றி பெற்றது. இது மும்பை இந்தியன்ஸ் சந்தித்த மிக மோசமான ஐபிஎல் தோல்வியாகும். சிஎஸ்கே-வின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன், ஆட்டமிழக்காமல் சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமானார்.
ஆடுகளத்தின் தன்மையை சரியாகப் புரிந்து, சஞ்சு சாம்சன் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவருக்கு இது நான்கு இன்னிங்ஸ்களில் இரண்டாவது சதம். முன்னதாக, சிஎஸ்கே அணிக்காக கலவையான தொடக்கம் கண்ட சாம்சன், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 115 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் ஃபார்முக்கு திரும்பியிருந்தார்.

போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் பேசிய சாம்சன், "விஷயங்களை எளிமையாக வைத்திருக்க முயற்சிக்கிறேன். இன்று வான்கடே பிட்ச் வழக்கமானதாக இல்லை. பந்து நின்று வந்தது. அணியின் தேவை என்ன என்பதை மதிப்பிட்டு விளையாடுவதுதான் முக்கியம்," என விளக்கினார்.
"சில விக்கெட்டுகளை இழந்ததால், நிலைத்து நிற்கும் ஒரு பேட்ஸ்மேன் களத்தில் இருப்பது முக்கியம் என நினைத்தேன். நான் அதைத்தான் செய்தேன், அது பலனளித்தது. ஆட்டம் எதைச் செய்ய வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லும். முன் தீர்மானிக்கப்பட்ட மனநிலையுடன் வரத் தேவையில்லை. ஆட்டச் சூழ்நிலையையும், அணியின் தேவையையும் புரிந்துகொண்டு திட்டமிடுவது எனது பொறுப்பு."
"விக்கெட் சரிவுகள் இன்றி இருந்திருந்தால், நான் இன்னும் விரைவாக ரன்கள் எடுத்திருப்பேன். ஆனால், விக்கெட்டுகள் விழுந்ததால், ஆட்டத்தை சிறப்பாக முடிப்பது முக்கியமாகியது" என்றார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக வான்கடே பிட்ச்சில் சதம் அடித்தது தனிப்பட்ட முறையில் சிறப்பானது என்றும், "எம்ஐ-க்கு எதிராக சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது," எனவும் குறிப்பிட்டார்.
"முதல் முறையாக மஞ்சள் ஜெர்சி அணிந்திருக்கிறேன். இது புதுமையானது. வான்கடே மைதானத்தில் இவ்வளவு மஞ்சள் நிறத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. என்று சஞ்சு சாம்சன் கூறினார். இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு சிஎஸ்கே அணி முன்னேறியுள்ளது. அடுத்ததாக வரும் ஞாயிற்றுகிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி , குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications