சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் துணை கேப்டனாக சஞ்சு சாம்சன் வர வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கூறி இருக்கிறார். தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இருக்கும் நிலையில் சஞ்சு சாம்சன் அவருக்கு அடுத்த இடத்தில் துணை கேப்டனாக இடம் பெறுவார் எனக் கூறி இருக்கிறார்.
2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிரடி ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சாம் கரன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு சென்றனர். சுமார் 11 சீசன்களாக ராஜஸ்தான் அணியின் முக்கிய முகமாக வலம் வந்த சஞ்சு சாம்சன், இனிவரும் போட்டிகளில் மஞ்சள் நிற ஜெர்சியில் களமிறங்க உள்ளார்.

சென்னை அணியின் இந்த முடிவை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே வெகுவாகப் பாராட்டியுள்ளார். சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு கச்சிதமாகப் பொருந்துவார் என்றும் அவர் கணித்துள்ளார். இது குறித்துப் பேசிய அனில் கும்ப்ளே, "இந்திய கிரிக்கெட்டின் பெருமை சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, எம்.எஸ் தோனி என ஒவ்வொரு தலைமுறையாக கைமாறி வந்துள்ளது. அந்த வகையில் சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வந்திருப்பது ஒரு மிகச்சிறப்பான நகர்வாகும். உலகக்கோப்பையை வென்று கொடுத்ததோடு, தொடர்ந்து 3 சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடிய அவர் தற்போது மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார்.
சென்னை அணியைப் பொறுத்தவரை சஞ்சு சாம்சன் அவர்களுக்குத் தேவையான அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கிறார். அவர் கேரளாவில் பிறந்தவர் மற்றும் சரளமாக தமிழ் பேசக்கூடியவர் என்பதால் உள்ளூர் ரசிகர்களுடன் அவரால் எளிதில் ஒன்றிணைய முடியும். எம்.எஸ் தோனியைப் போலவே அவரும் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன். ராஜஸ்தான் அணியை நீண்ட காலம் கேப்டனாக வழிநடத்திய அனுபவம் அவருக்கு இருப்பதால், துணை கேப்டன் பொறுப்புக்கு அவர் சரியான தேர்வாக இருப்பார்.

கடந்த காலங்களில் ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ரவீந்திர ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டபோதோ அல்லது சிக்கல் வந்தபோதோ தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது அந்த தலைமைப் பண்பு குழுவில் சஞ்சு சாம்சன் இணைந்திருப்பது அணிக்குப் பெரிய பலமாகும். ஒருவேளை ருதுராஜுக்கு காயம் ஏற்பட்டால் சாம்சனே கேப்டன் பொறுப்பை ஏற்பார். இந்த சீசனில் ஏதாவது ஒரு கட்டத்தில் சாம்சனிடம் விக்கெட் கீப்பிங் பொறுப்பை தோனி வழங்கினாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை" என்று கூறினார் கும்ப்ளே.
