சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி சஞ்சு சாம்சனை வாங்குவதற்காக சிவம் துபேவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அளிக்க இருப்பதாக ஒரு தகவல் பரவி இருக்கிறது. இதை கேட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஒருவேளை இந்த முடிவை சிஎஸ்கே அணி எடுத்தால் அது மிகவும் முட்டாள்தனமானது என அவர்கள் விவாதித்து வருகின்றனர்.
2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட சஞ்சு சாம்சன், அப்போது அந்த அணி நிர்வாகத்திற்கும் அவருக்கும் இடையே உரசல் போக்கு இருந்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அப்படி ஒன்றும் இல்லை என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்திருந்தார்.
ஆனால், தற்போது சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன் நெருக்கமாக இருக்கிறார். அமெரிக்காவில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் மற்றொரு அணியான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளின் போது, அந்த அணி நிர்வாகத்தினருடன் அவர் நெருக்கமாக இருந்தார்.

இது ஒருபுறம் இருக்க, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நெருக்கமான நண்பரான ஆர்.எஸ். பிரசன்னா, சிஎஸ்கே அணியில் இருந்து ஒரு இடது கை பேட்ஸ்மேன் மற்றும் ஒரு அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு செல்ல இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார். அது சிவம் துபே மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் என ரசிகர்கள் ஊகித்து இருக்கின்றனர்.
ஆனால், சஞ்சு சாம்சனுக்காக சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் குவித்து இருக்கும் சிவம் துபேவை அணியை விட்டு அனுப்புவது முட்டாள்தனம் என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் படுமோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைத்தான் பிடித்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன் குவித்தவர் சிவம் துபேதான். அவர் 14 இன்னிங்ஸ்களில் 357 ரன்கள் சேர்த்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 132.2 என்பதாக இருந்தது. ஸ்ட்ரைக் ரேட் சற்று குறைவாக இருந்தாலும், சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்களை சேர்த்தது அவர்தான்.
இதற்கு முன்பு நடந்த இரண்டு சீசன்களிலும் சிவம் துபே சிஎஸ்கே அணிக்காக மிடில் ஆர்டரில் அதிரடி ஆட்டத்தை ஆடி பல வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். எனவே அப்படி ஒரு வீரரை சிஎஸ்கே அணி எக்காரணத்தை கொண்டும் வெளியே அனுப்ப கூடாது என சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சிஎஸ்கே அணி இதற்கு முன் எப்போதும் அணிமாற்றங்களை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சஞ்சு சாம்சனை தங்கள் அணிக்கு வரவழைப்பதாக இருந்தாலும், அதற்காக சிவம் துபே போன்ற மற்ற வீரர்களை விட்டுக் கொடுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.