சென்னை: தமிழ்நாடு அணியின் சீனியர் வீரரான விஜய் சங்கர் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள ரஞ்சி டிராபி தொடரில் கேரளா அணிக்காக விளையாட உள்ளதாக தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு அணியில் இருந்து விஜய் சங்கர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் சூழலில், இந்த முடிவை விஜய் சங்கர் எடுத்திருப்பதாக தெரிகிறது.
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆல்ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டவர் விஜய் சங்கர். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று 3 வகையான பங்களிப்பை செய்ய முடியும் என்பதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அதன்பின் விஜய் சங்கரால் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முடியவில்லை.

ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக ஆடி வந்த விஜய் சங்கர், மிகச்சிறந்த பங்களிப்பை ஒரு பேட்ஸ்மேனாக அளித்து வந்தார். ஒருமுறை கடைசி நேரத்தில் களமிறங்கி 16 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்டார். ஆனால் விஜய் சங்கர் எதிர்பார்த்த அளவிற்கு திறமையை வெளிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் விஜய் சங்கர் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். தற்போது தமிழ்நாட்டில் நடந்து வரும் புச்சிபாபு கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணியில் இருந்து விஜய் சங்கர் நீக்கப்பட்டுள்ளார். இதனால் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணியில் இருந்து வெளியேற விஜய் சங்கர் முடிவு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனை டிஎன்சிஏவும் உறுதி செய்திருக்கிறது.
கடந்த ஆண்டு நாட்ந்த ரஞ்சி டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடர்களில் விஜய் சங்கர் தமிழ்நாடு அணியின் தொடக்க பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. இது புச்சிபாபு தொடரிலும் பின்பற்றப்பட்ட நிலையில், 34 வயதாகும் விஜய் சங்கர் தமிழ்நாடு அணியில் இருந்து வெளியேற கேரளா அணிக்காக விளையாட முடிவு எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு பாபா அபரஜித்தும் தமிழ்நாடு அணியில் இருந்து விலகி, கேரளா அணியில் இணைந்தார். தற்போது விஜய் சங்கர் 2வது வீரராக கேரளா அணிக்கு சென்றிருக்கிறார். அதேபோல் ஆந்திர பிரதேச அணிக்காக ஆடி வந்த ஹனுமா விஹாரி, தற்போது திரிபுரா அணிக்காக விளையாட உள்ளார். இது உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான்.
தமிழ்நாடு அணிக்காக 70 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள விஜய் சங்கர் 3,702 ரன்களையும், 43 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேபோல் கேப்டனாக விஜய் ஹசாரே, தியோதர் டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடர்களையும் தமிழ்நாடு அணிக்காக வென்று கொடுத்துள்ளார்.