சென்னை: லக்னோ அணி வெற்றிபெற சென்னை அணி சார்பாக 218 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் சென்னை அணியின் ரன்ரேட் குறைந்த நிலையில், ராயுடு மற்றும் தோனி அடுத்தடுத்து சில சிக்சர்களை விளாசினர். அதேபோல் லக்னோ அணி தரப்பில் ரவி பிஷ்னாய் மற்றும் மார்க் வுட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 6வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடர்ந்து சென்னை அணி சார்பாக தொடக்க வீரர்களாக கான்வே - ருதுராஜ் இணை களமிறங்கியது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்த இணை, பவர் பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் சேர்த்தனர்.

ஒவ்வொரு ஓவரிலும் சிக்சர்களை விளாசிய ருதுராஜ் கெய்க்வாட் 25 ரன்களில் அரைசதம் கடந்தார். இதனால் இவரை கட்டுப்படுத்த முடியாமல் லக்னோ அணி பந்துவீச்சாளர்கள் திணறினர். முதல் விக்கெடுக்கு இந்த இணை 110 ரன்கள் சேர்த்த நிலையில், ருதுராஜ் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஷிவம் துபே களமிறங்கினார். இவர் ரன்கள் சேர்க்க திணறிய நிலையில், மற்றொரு தொடக்க வீரர் டெவன் கான்வே 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் அதிரடிக்கு மாறிய ஷிவம் துபே 16 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மொயின் அலி 19 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழக்க, சென்னை அணி 17 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் சேர்த்தது. 9 ஓவர்களிலேயே 110 ரன்கள் எடுத்த சென்னை அணியின் ஸ்கோரை, அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ரவி பிஷ்னாய் தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து சென்னை அணி 200 ரன்கள் எடுக்குமா என்ற கேள்வி எழுந்தது.
19 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 203 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து தல தோனி களமிறங்கி ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளந்தது. மார்க் வுட் வீசிய 2 பந்துகளில் தோனி 2 சிக்சர்களை விளாச, மூன்றாவது பந்திலும் சிக்சர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களை தோனி கடந்தார். பின்னர் ராயுடு - சான்ட்னர் இணை களத்தில் இருந்தது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை களத்தில் இருந்த ராயுடு 14 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார்.