சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் மோசமான தோல்விகளை சந்தித்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விழித்துக் கொண்டுள்ளது. இனிமேலும் அனுபவம் என்ற பெயரில் வயதான வீரர்களை மட்டுமே வைத்து ஐபிஎல் கோப்பை வெல்லலாம் என்ற திட்டம் வேலை செய்யாது என்பதை சிஎஸ்கே நிர்வாகம் உணர்ந்துள்ளதாகத் தெரிகிறது. தற்போது அடுத்தடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது ஸ்டீபன் பிளம்மிங் - தோனி ஜோடி.
இரண்டு போட்டிகளுக்கு முன்பாக, 20 வயதான ஷேக் ரஷீத்தை, ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக, துவக்க வீரராகக் களமிறக்கியது சிஎஸ்கே. கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 17 வயதான ஆயுஷ் மத்ரே விளையாடினார். இவர்கள் இருவருமே தங்களின் முதல் போட்டியிலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தார்கள்.

இந்த நிலையில் அடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், 21 வயதான தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் டெவால்டு பிரெவிஸ் விளையாட உள்ளதாகக் கூறப்படுகிறது. வரிசையாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய பாதைக்கு மாறி இருப்பதை வெளிப்படுத்தி உள்ளது.
அடுத்து, 22 வயதான வன்ஷ் பேடி அடுத்த வரும் போட்டிகளில் பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இது 2026 ஐபிஎல் தொடரை குறி வைத்து செய்யப்படும் நகர்வு என சிஎஸ்கே வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேசுகையில், "இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சிப்போம். இல்லை எனில், 2026 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனை முடிவு செய்ய முயற்சிப்போம்" என்று கூறியிருந்தார். அதற்காகவே தற்போது இளம் வீரர்களை தயார் செய்யும் பணி துவங்கியிருப்பதாகத் தெரிகிறது.
இதன் மூலம், 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இளம் வீரர்கள் அடங்கிய படையாக மாறப் போவது உறுதியாகி இருக்கிறது. இனியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வயதான வீரர்களின் கூடாரமாக இருக்காது என நம்பலாம். ஆனால் தோனி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் அடுத்த ஆண்டு விளையாடுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.