சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள்,இந்நாள் வீரர்கள் பங்கேற்ற சிஎஸ்கே ரோர்ஸ் என்ற நிகழ்ச்சி சேப்பாக்கம் மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பங்கேற்ற கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் நடந்தது.
அதன் பிறகு சிஎஸ்கே வீரர்கள் ஒரே மேடையில் அணிவகுத்து நின்றனர். அப்போது மேடையில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார். அதில், "தோனி போன்ற ஒரு ஜாம்பவான் முன் வந்து நிற்பது கொஞ்சம் பதற்றத்தை தருகிறது. நான் உங்களைப் போல் கூலான நபர் கிடையாது. அதனால் கொஞ்சம் பயமாக இருக்கிறது."

"உங்களை டிவியில் பார்த்திருக்கின்றேன். மைதானத்தில் பார்த்திருக்கின்றேன். முதல் முறையாக இவ்வளவு அருகில் பார்க்கின்றேன். நான் உங்களுடைய தீவிர ரசிகர். உங்களுடைய கிரிக்கெட்டை விட உங்களது தலைமை பண்பு எங்களுக்கு மிகவும் பிடிக்கும். எங்களைப் போன்ற நபர்களுக்கு நீங்கள் ஒரு இன்ஸ்பிரேஷன்."

"நான் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஈசிஆர் இல் தான் தங்கி இருக்கின்றேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் போது ரசிகர்கள் எழுப்பும் சத்தம் இசிஆரில் கேட்கும். நீங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உங்களிடம் இது கடைசி ஐபிஎல் தொடரா என்று கேள்வி கேட்கப்பட்டது."
"அதற்கு, நாட் டெஃபனைட்லி என்று பதில் அளித்தீர்கள். அந்த பதிலை நாங்கள் ஒவ்வொரு ஐபிஎல் சீசன் இறுதியிலும் கேட்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்" என்று கூறினார். அதற்கு உடனே மைக்கை வாங்கி பேசிய தோனி, "அது மிகவும் கடினம்" என்றார்.அதற்கு சிவகார்த்திகேயன், "நீங்கள் எவ்வளவு ஆண்டு விளையாடினாலும், 60 வயது வரை விளையாடினாலும்,நாங்கள் பார்ப்போம்" என்று கூறினார்.இதற்கு "நான் முயற்சி செய்கின்றேன்.ஆனால் ஏற்றம் போல் இறக்கமும் இருக்கும்"என்று பதிலளித்தார்.
"நீங்கள் முயற்சி செய்கிறேன் என்ற வார்த்தையே எனக்கு போதும். நாங்கள் அதையே எடுத்துக் கொள்கின்றோம்" என்று சிவகார்த்திகேயன் பதில் அளித்தார். தொடர்ந்து சஞ்சு சாம்சங் குறித்து பாராட்டி பேசிய சிவகார்த்திகேயன், "தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் அப்படி ஒரு பிணைப்பு இருக்கின்றது. அது சஞ்சு சம்சனுக்கு நன்றாகவே தெரியும். கேரளாவில் இருந்து வரும் மலையாள படங்கள் இங்கு சூப்பர் ஹிட் ஆகும்."

"இதைப்போல் தமிழ் படங்கள் கேரளாவிலும் சூப்பர் ஹிட் ஆகும். கேரளாவிலிருந்து நடிகர், நடிகைகள் வந்தால் அவர்கள் இங்கு பிரபலமாகி விடுவார்கள்.அதை போல் தற்போது கேரளாவிலிருந்து முதல் முறையாக கிரிக்கெட் வீரர் நீங்கள் வந்திருக்கிறீர்கள். நீங்கள் பிளாக்பஸ்டர் ஆக வேண்டும் உங்களுடைய வருகை சிஎஸ்கே அணிக்கு மேலும் பலத்தை தந்திருக்கின்றது."
"கேப்டன் ருத்ராஜுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுக்கு இரண்டு மிகப்பெரிய ஆதரவு இருக்கின்றது. ஒன்று மைதானத்தில் உங்களுடன் தோனி இருக்கின்றார். தோனி ஒரு முஃபாசா, நீங்கள் ஒரு சிம்பா! இதேபோன்று பார்வையாளர்கள் ரசிகர்களாகிய நாங்களும் உங்கள் பின்னாடி நிற்கின்றோம். சிஎஸ்கே என்பது ஒரு குடும்பம் ரசிகர்களை தாண்டி நாங்கள் குடும்பமாக இருக்கின்றோம். ஏனென்றால் தோல்வியிலும் நாங்கள் உங்களுடன் நிற்கின்றோம் என்பதால் தான் இதனை குடும்பம் என்று நான் கூறி வருகின்றேன்."

"பிரவீஸ் இங்கே இருக்கிறார். அவர் என்னைப் பார்த்து யாருடா இவன் என்ன பேசுறான் என்று கண்டிப்பாக யோசித்து கொண்டு இருப்பார். மீண்டும் ஒருமுறை சிஎஸ்கே அணியினருக்கு நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். ரசிகர்களின் சார்பாக தான் நான் இங்கு வந்திருக்கின்றேன். ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். அடியே! தி ரியல் ஓ ஜி இஸ் பேக் டி என்று தனது படத்தின் வசனத்தை குறிப்பிட்டு சிவகார்த்திகேயன் தனது பேச்சை நிறைவு செய்தார்."