சென்னை: மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு விடை தேடும் படலம் தொடங்கியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் அதிரடி வீரர் ஆயுஷ் மத்ரேயின் பெயர் அந்த இடத்திற்குப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய மும்பை அணி கேப்டனான சீனியர் வீரர் அஜிங்க்யா ரஹானேவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், 18 வயது மட்டுமே ஆன ஆயுஷ் மத்ரேயை அடுத்த கேப்டனாக உருவாக்கும் முயற்சியில் மும்பை கிரிக்கெட் சங்கம் இறங்கியுள்ளது.

கடந்த 2025 ஐபிஎல் தொடரில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்ததைத் தொடர்ந்து, மாற்று வீரராக சிஎஸ்கே அணிக்குள் நுழைந்தவர்தான் இந்த ஆயுஷ் மத்ரே. கிடைத்த வாய்ப்பை இரு கைகளாலும் பற்றிக்கொண்ட அவர், மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியிலேயே 15 பந்துகளில் 32 ரன்கள் விளாசி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
தொடர்ந்து, ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் 94 ரன்கள் குவித்து, சிஎஸ்கே அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். ஐபிஎல் மட்டுமல்லாது, தனது அறிமுக ரஞ்சி சீசனிலேயே மும்பை அணிக்காக இரண்டு சதங்கள் உட்பட 504 ரன்களைக் குவித்தும் அசத்தினார்.
இந்நிலையில், வரும் புச்சி பாபு அழைப்புத் தொடருக்கான மும்பை அணியின் கேப்டனாக ஆயுஷ் மத்ரே நியமிக்கப்பட்டுள்ளார். சர்பராஸ் கான் போன்ற சீனியர் வீரர்கள் அணியில் இருந்தபோதும், 18 வயது இளம் வீரருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, அவரை எதிர்கால ரஞ்சி கேப்டனாக உருவாக்கும் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் திட்டத்தையே இது காட்டுகிறது.
"மத்ரே-வை ஒரு கேப்டனாக நாங்கள் உருவாக்க விரும்புகிறோம். அவர் இந்தியா அண்டர்-19 அணியின் கேப்டன் என்பதை மறந்துவிடாதீர்கள். அவருக்கு ரஞ்சி மற்றும் ஐபிஎல் அனுபவம் உள்ளது. அழுத்தத்தை எப்படி கையாள்வது என்பது அவருக்குத் தெரியும்," என்று மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணி, வீரர்களை உருவாக்குவதில் மட்டுமல்ல, கேப்டன்களை உருவாக்குவதிலும் ஒரு தனித்துவம் மிக்க அணி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக இளம் வயதிலேயே பொறுப்பேற்ற ருதுராஜ் கெய்க்வாட்டை சரியான நேரத்தில் கண்டறிந்து, இன்று சிஎஸ்கே அணியின் கேப்டனாக அவரை உருவாக்கியது சிஎஸ்கே நிர்வாகம்.
அதே வழியில், தற்போது ஆயுஷ் மத்ரே-வும் பயணிக்கத் தொடங்கியுள்ளார். இந்தியா அண்டர்-19 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், தற்போது மும்பை போன்ற ஒரு பெரிய அணியை வழிநடத்தத் தயாராகி வருகிறார். சிஎஸ்கே அணிக்குள் நுழைந்த குறுகிய காலத்திலேயே, ஒரு வீரருக்குள் இருக்கும் தலைமைப் பண்பை வெளிக்கொண்டு வந்து, அவரை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் சிஎஸ்கேவின் இந்த "கேப்டன்சி மெட்டீரியல்" ஃபார்முலா மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளது.