சென்னை : ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் சிஎஸ்கே தொடக்க வீரர் ருதுராஜ் கெய்கவாட் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ருதுராஜ், தற்போது ஐபிஎல தொடரில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
நடப்பு சீசனில் முதல் போட்டியில் குஜராத்துக்கு எதிராக ருதுராஜ் 92 ரன்கள் எடுத்து 8 ரன்களில் சதத்தை தவறவிட்டார். இந்த நிலையில், லக்னோவை 2வது லீக் ஆட்டத்தில் எதிர்கொண்ட ருதுராஜ் , தன்னுடைய ஷாட் தேர்வின் மூலம் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார்.

குறிப்பாக, கிருஷ்ணப்பா கௌதம் வீசிய ஓவரில் தொடர்ந்த சிக்சர்களை ருதுராஜ் பறக்கவிட்டார். எப்படி போட்டாலும் அடிக்கிறான் பா என்ற பாணியல் கேஎல் ராகுலும் தடுமாற தொடங்கிவிட்டார். வேகப்பந்து, சுழற்பந்துவீச்சு என அனைத்தையும் ருதுராஜ் பறக்கவிட்டார்.
25 பந்துகளில் ருதுராஜ் அரைசதம் கடந்தார். இதன் மூலம் தொடர்ந்து 2 அரைசதம் அடித்துள்ள ருதுராஜ், நடப்பு தொடரில் 100 ரன்களை தொட்ட முதல் வீரர் என்ற பெருமையை பெற்று ஆரஞ்ச் நிற தொப்பியை தனதாக்கி கொண்டார். தொடர்ந்து அதிரடியை காட்டிய ருதுராஜ் 31 பந்தில் 57 ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.
இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 28 பந்தில் அரைசதம் கடந்த நிலையில், 49 பந்தில் 100 ரன்களை தொட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே 200 ரன்கள் மேல் அடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதே போன்று மற்றொரு வீரரான கான்வேவும் 29 பந்தில் 47 ரன்கள் சேர்த்தார்.