லண்டன்: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் இடம் பெற்று அதிக கவனம் பெற்ற அதிரடி பேட்ஸ்மேன் டெவால்ட் பிரேவிஸ், 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அடுத்து இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 தொடரில் தனது அதிரடியைக் காட்டி இருக்கிறார்.
இங்கிலாந்தில் கவுண்டி அணிகளுக்கு இடையேயான விட்டாலிட்டி பிளாஸ்ட் (Vitality Blast) என்ற டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஹாம்ப்ஷயர் (Hampshire) அணியில் டெவால்ட் பிரேவிஸ் இடம் பிடித்தார். எசெக்ஸ் (Essex) அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆடினார். இதுவே இந்த தொடரில் அவர் விளையாடிய முதல் போட்டியாகவும் அமைந்தது.

தனது முதல் போட்டியிலேயே எசெக்ஸ் அணிக்கு எதிராக அதிரடியாக ஆடினார். தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸரை விளாசினார். மேலும், 32 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தார். நான்கு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களை அடித்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 212.5 என்பதாக இருந்தது.
ஹாம்ப்ஷயர் அணியின் கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் 31 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்திருந்தார். டோபி ஆல்பர்ட் 34 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்திருந்தார். இந்த மூவரிலேயே டெவால்ட் பிரேவிஸ் தான் அதிக ரன்கள் சேர்த்திருந்தார். மற்றவர்கள் சொற்ப ரன்கள் எடுத்தனர். ஹாம்ப்ஷயர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய எசெக்ஸ் அணி 124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 106 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது ஹாம்ப்ஷயர். சிஎஸ்கே அணியில் ஆடியதை போலவே, இங்கிலாந்திலும் டெவால்ட் பிரேவிஸ் பட்டையைக் கிளப்பி வருகிறார். இது சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.