கேப் டவுன்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் இளம் நட்சத்திர வீரர் டிவோல்டு பிரவிஸ் ஆட்டதிறனை ஜாம்பவான் ஹெர்ஷல் கிப்ஸ், கடுமையாக விமர்சித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற SA20 லீக் போட்டியில், ப்ரெவிஸ் 5 பந்துகளில் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்ததைத் தொடர்ந்தே இந்த விமர்சனம் எழுந்துள்ளது.
பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து ஆடியது. SA20 லீக் போட்டியின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் கேஷவ் மகாராஜ் தலைமையிலான பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி 189 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்தியது. அப்போது நான்காவது வரிசையில் களமிறங்கிய பிரவிஸ், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லத் தவறினார்.

சௌரவ் கங்குலி பயிற்சி அளித்த பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணிக்காக ஆடிய பிரவிஸ்,லூயிஸ் கிரிகோரி வீசிய எட்டாவது ஓவரில் அற்புதமான ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார். எனினும், மீண்டும் ஒரு பெரிய ஷாட்டுக்கு முயன்றபோது, நான்காவது பந்தில் மேத்யூ பிரீட்ஸ்கேவால் பவுண்டரி லைனில் அருகே கேட்ச் ஆகி அவுட்டானார்.
இது குறித்து ஹெர்ஷல் கிப்ஸ் தனது 'எக்ஸ்' சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு பதிவிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். "இந்த பிரவிஸ் பையனுக்கு பயிற்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன். அவன் நிறைய டி20 போட்டிகளில் விளையாடி இருந்தாலும், இன்னிங்சை எப்படி கட்டமைப்பது என்பதே தெரியவில்லை" என்று கிப்ஸ் ட்வீட் செய்திருந்தார்.
கிப்ஸின் இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றது. ஒரு ரசிகரின் கருத்துக்கு பதிலளித்த கிப்ஸ், "அவரிடமிருந்து அதிக பொறுப்பு வரவேண்டும். ஆனால் அவர் அதை விரும்புவதாக எனக்குத் தோன்றவில்லை" என தனது கருத்தைப் பதிவு செய்தார்.
மற்றொரு ரசிகரின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது, "பேட்டிங் என்பது பழக்கவழக்கங்களைப் பற்றியது. குறுகிய 30-40 ரன்கள் எடுப்பது நல்ல அறிகுறி அல்ல" என்று கிப்ஸ் குறிப்பிட்டார். முன்னாள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் எம்.ஐ. கேப் டவுன் அணியின் நட்சத்திர வீரரான பிரவிஸ்க்கு இது நல்லதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
2022 U19 உலகக் கோப்பையில் தனது திறமையை வெளிப்படுத்திய ப்ரெவிஸ், தென்னாப்பிரிக்காவுக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் எம்.ஐ. கேப் டவுன் அணி தனது முதல் SA20 பட்டத்தை வெல்வதில் அவர் முக்கியப் பங்காற்றினார்.
SA20 2026 போட்டிக்கான மிகவும் விலையுயர்ந்த வீரரான ப்ரெவிஸ், இந்த ஆண்டு நடைபெற்ற SA20 ஏலத்தில் R16.5 மில்லியன் (சுமார் ₹8.30 கோடி) செலவில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் உருவெடுத்தார். எனினும் சமீப காலமாக தொடர்ந்து பிரவீஸ் அதிரடி காட்டினாலும் விரைவில் ஆட்டமிழந்து விடுகிறார். இதனால், அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை